செங்கோட்டை: தமிழகம் மற்றும் கேரளாவை இணைக்கும் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதி இயற்கை எழில் கொஞ்சும், மேகங்கள் மலை முகடுகளில் தழுவிச் செல்லும் இயற்கை நிறைந்த பகுதிகளாக நெல்லை மாவட்டம் செங்கோட்டை தாலுகா பகுதிகளான கண்ணுப்புள்ளி மெட்டு, மேக்கரை, புளியரை உள்ளிட்ட பகுதிகள் அமைந்துள்ளன.
இந்த வனப் பகுதிகளில் மேக்கரை பகுதியில் உள்ள பல தனியார் நிலங்கள் வழியாக நீர்நிலைகளுக்கு குற்றால அருவியை போல தனியார் நிலங்களிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து கொட்டி வருகிறது.
வனத்துறை, பொதுப் பணித் துறை, வருவாய்த்துறை என எந்த அரசு அலுவலகங் களிலும் அனுமதி பெறாமலே தனியார் நிலத்துக்கு சொந்தக் காரர்கள் தங்களது இடங்களில் தனியாக விடுதிகளை உருவாக்கி பின்னர் அங்கே வனப்பகுதிகளில் இருந்து வரும் நீர் ஓடைகளை தங்களது சுய விருப்பப்படி செயற்கையாக அருவி போன்று தயார் செய்து வைத்து இதற்கு தனியாக கட்டணங்களை நிர்ணயம் செய்து வசூல் செய்து வருகின்றனர்.
குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகளில் சொந்த வாகனங்களில் வரும் பணம் படைத்த சுற்றுலாப் பயணிகள் தனியார் நிலங்களிலுள்ள அருவிகளுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.
மேக்கரை பகுதிகளில் உருவாக்கப்பட்டுள்ள தனியார் அருவிகளுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இந்த பயணிகளின் வரத்தால், மேக்கரை பகுதிகளில் உள்ள பெண்கள் பள்ளிக் குழந்தைகள் தைரியமாக தங்களது காட்டுப் பகுதிகளிலுள்ள வீடுகளில் இருந்து வெளியே வந்து தனியாக நடமாட முடியாத நிலை உருவாகியுள்ளது.
இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை ஓட்டுபவர்கள், குடிபோதையில் வாகனங்களை ஓட்டுவதுடன், வாகனங்களில் வருபவர்களும் அந்தப் பகுதிகளிலேயே குடித்து விட்டு பாட்டில்களை உடைத்து மக்கள் நடமாடும் பகுதிகளில் போட்டுச் செல்கின்றனர். மேலும், நீர் வரும் ஓடைகளிலும் உடைந்த பாட்டில் துண்டுகளைப் போட்டுவிட்டுச் செல்வதால் ஆடு,மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்று திரும்பும் போது பாதங்களில் கண்ணாடி அறுத்து காயங்கள் ஏற்படுவதாக அம்மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, மேக்கரை பகுதிகளிலுள்ள தனியார் அருவிகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேக்கரை கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இப்படி அதிகளவு மனித நடமாட்டம் காரணமாக இந்த அருவிகள் இருக்கும் பகுதிகளில் வன விலங்குகள் நடமாட்டம் தொடங்கி விடுவதால் இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.