சென்னையில் கடந்த 2015 டிசம்பரில் நள்ளிரவு திடீரென செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடப்பட்டதை அடுத்து அடையாறு ஆற்றங்கரையோரம் இருந்த பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின. ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து வந்த நிலையில், கடைசிக் கட்டம் வரைக்கும் ஏரியை நிரம்ப வைத்து, திடீரென ஏரியை முன்னெச்சரிக்கை இன்றி திறந்துவிடப் பட்டதை கேலி செய்தவர்கள், இன்று அதே போன்ற 44 அணைகளின் திறப்பால் பேரழிவைச் சந்தித்திருக்கிறார்கள்.
கேரளாவில் வரலாறு காணாத மழை வெள்ளத்தால் அந்த மாநிலமே பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. பெருமழை காரணமாக மாநிலத்தில் உள்ள பெரிய அணைகளான இடுக்கி, பாணாசுரசாகர், செறுதோணி, மலம்புழா உள்ளிட்ட அனைத்து அணைகளுக்கும் அதிக அளவு நீர்வரத்து இருந்ததால் பாதுகாப்பு கருதி 44 அணைகள் திறந்து விடப்பட்டன. இதனால் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கும் சூழ்நிலை உருவானது.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 370 பேர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடு, உடமைகளை இழந்து முகாம்களில் தங்கியிருக்கின்றனர். இயற்கைச் சீற்றம் காரணமாக இந்தப் பேரழிவு ஏற்பட்டுள்ளதாக கேரளம் கூறினாலும், மாநில அரசும் இந்தப் பேரழிவுக்கு காரணமாக இருந்துள்ளதாக கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா, பாஜகதலைவர் ஸ்ரீதரன் பிள்ளை ஆகியோர் குற்றம்சாட்டுகின்றனர்.
கேரளாவில் நிகழ்ந்திருக்கும் வரலாறு காணாத பேரழிவுக்கு இயற்கை மட்டும் காரணம் அல்ல. 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதற்கு இயற்கையை மட்டும் குறை கூற முடியாது. முழுக்க முழுக்க மனிதர்களே இந்த பாதிப்புக்கு காரணம். கேரளாவில் மழை காரணமாக 44 அணைகள் நிரம்பியதால் அந்த அணைகளை மாநில அரசு ஒரே நேரத்தில் திறந்துவிட்டது. அணைகளை திறக்கும்போது அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தகுந்த முன்னெச்சரிக்கையை விடுத்திருக்க வேண்டும். ஆனால் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் கேரள அரசு மேற்கொள்ளவில்லை. நள்ளிரவில் கேரள மக்கள் தூங்கிக்கொண்டிருந் தபோது அணைகளை எல்லாம் அரசு திறந்துவிட்டுள்ளது. எனவே இது பற்றி நீதி விசாரணை நடத்த வேண்டும். – என்று கூறினார் ரமேஷ் சென்னிதலா.
The rain has subsided. After devastating flood ,situation is back under https://t.co/Y2TLcEs7HW it’s the time for the Govt to face tough questions.
“Why was the shutters of all the 34 dams released in one go?Was there any preparations before taking this step?Where is SDMA???— Ramesh Chennithala (@chennithala) August 22, 2018
நிரம்பி வரும் அணைகளை மழை நிலவரம் தெரிந்து அவ்வப்போது திறந்துவிட்டு வெளியேற்றி இருந்தால், இப்படி அணைகளை ஒட்டுமொத்தமாக திறந்துவிட்டு, மாநிலத்தையே வெள்ளத்தில் மூழ்கடித்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது என்று கூறுகின்றனர் பலரும். ஆனால், கேரளத்தை ஆளும் கம்யூனிச அரசோ, தமிழகத்தின் மத்தியப் பகுதிக்கு ஜீவாதாரமாக விளங்கும் முல்லைப் பெரியார் அணையின் நீர்மட்டத்தைக் குறைக்கவேண்டும் என்றும், மிகை நீரை வெளியேற்ற வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் மனு போட்டு நிறைவேற்றிக் கொண்டது!