Home இந்தியா அயோத்தி வழக்கு… அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றத் தேவையில்லை: உச்ச நீதிமன்றம்

அயோத்தி வழக்கு… அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றத் தேவையில்லை: உச்ச நீதிமன்றம்

ayodhya disputed building demolished

அயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவையில்லை என்று கூறியுள்ளது உச்ச நீதிமன்றம்!

கடந்த 1994 ஆம் ஆண்டு அயோத்தியில் சர்ச்சைக்குரிய கட்டடம் இடிக்கப் பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பளித்தது. அதில் தொழுகை எங்கு வேண்டுமென்றாலும் செய்யலாம் என்பதால் அதற்கு மசூதி அவசியமல்ல என்று கூறியது. இதை எதிர்த்து, மசூதி என்பது இஸ்லாத்திற்கு உட்பட்டது என்றும், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரியும் முஸ்லிம் அமைப்புகள் வழக்கு தாக்கல் செய்தன. இந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்று பாகங்களாகப் பிரித்து அலகாபாத் உயர் நீதிமன்றம் 2010 ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்றும் வழக்கு தாக்கலில் கோரப்பட்டது.

இந்த வழக்குகள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் விசாரணையில் வந்தது. இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றத் தேவையில்லை என 3 நீதிபதிகள் கொண்ட அமர்வில் 2 நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.

முன்னதாக, அயோத்தியில் சர்ச்சைக்குரிய கட்டடம் இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள், தீபக் மிஸ்ரா, அசோக் பூஷண், அப்துல் நசீர் அடங்கிய அமர்வு, விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அசோக் பூஷண் இருவரும், இந்த வழக்கில் தங்களுக்கும் நீதிபதி நசீருக்கும் கருத்து வேறுபாடு உள்ளது. அயோத்தி வழக்கில் 1994ல் வழங்கப்பட்ட தீர்ப்பில் எந்த மாற்றமும் செய்யத் தேவையில்லை. அனைத்து மதங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களையும் சமமாக பாவிக்க வேண்டும். அயோத்தி வழக்கை, அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றத் தேவையில்லை. சிவில் வழக்குகளில் ஆதாரங்கள் அடிப்படையில் முடிவு செய்ய வேண்டும். அது குறித்த முந்தைய வழக்குகளுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறினர்.

நீதிபதி நசீர் தனது தீர்ப்பில் 1994ல் எந்த ஆய்வும் இல்லாமல் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனை விரிவாக மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றார். இதை அடுத்து, இந்த வழக்கில் மேல் முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப் பட்டன.

அயோத்தி குறித்த பிரதான வழக்கு வரும் அக்டோபர் 29ஆம் தேதிக்கு விசாரணைக்கு வருகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version