சபரிமலை அரசியலின் முக்கிய இலக்கு, மத்திய அரசும் பிரதமர் மோடியும் தான் என்கிறார்கள் அரசியலை உன்னிப்பாகக் கவனித்து வரும் விமர்சகர்கள். இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப் பட்டாலும், நேற்றைய ஒரு நிகழ்வு, அதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.
பிரதமர் மோடியின் பாதுகாப்பு வாகனங்களை மறிக்கப் போவதாக அறிவித்த சபரிமலை பெண் போராளி திருப்தி தேசாய் கைது செய்யப்பட்டதும், அப்போது அவர் கூறிய சில தகவல்களும், எதிர்ப்பாளர்களின் இலக்கு என்ன என்பதை வெளிப்படையாகக் காட்டிவிட்டது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயதுப் பெண்களுமே செல்லலாம் என அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் கடந்த 28ம் தேதி பிறப்பித்த உத்தரவை அடுத்து பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளன. கடும் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதத்தில் இருந்து சரியாக மீளவில்லை என்று கூறப்பட்ட கேரளம், மீண்டும் ஒரு சேதத்தில் சிக்கிக் கொண்டது. நாடு நாடாகச் சென்று, பிணங்களை வைத்து அரசியல் செய்து கொண்டு, வெள்ள நிவாரணம் இன்னமும் போதவில்லை என்று உண்டியல் குலுக்கிக் கொண்டிருந்த கம்யுனிஸ முதல்வர் பிணரயி விஜயன், அடுத்த பிண வெறி அரசியலுக்கு தயாராவிட்டார்.
அதற்கு வசதியாக வந்ததுதான் சபரிமலை குறித்த தீர்ப்பு! இந்தத் தீர்ப்பை எதிர்த்து கேரளாவில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மாதவிலக்கு வாய்ப்புள்ள பெண்கள், சபரிமலை சந்நிதானத்துக்கு வரக்கூடாது என்று போராட்டக்காரர்கள் கூறுகின்றனர். மேலும், மத நம்பிக்கையில் நீதிமன்ற தலையீடு கூடாது என்று கூறுகின்றனர்.
ஆனால், பெண் உரிமை ஆர்வலர்கள் என்ற பெயரில் சபரிமலை நடைமுறையை உடைத்து, நம்பிக்கையைச் சிதைத்து, ஹிந்து மத நம்பிக்கைகளை கேலி செய்வதற்கு என்றே கம்யூனிஸ அரசால் நியமிக்கப் பட்ட பெண் உரிமைக் கைக்கூலிகள் ஐயப்பனை தரிசிக்கும் போர்வையில் சபரிமலை ஐயப்பன் சந்நிதியை அடைவதில் தீவிர வெறித்தனத்துடன் உள்ளனர்.
இது போதாதென்று, வேறு சில பெண்ணுரிமை அமைப்பு ஆர்வலர்கள் தூண்டிவிட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்களில் ஒருவர் பூமாதா பிரிகேட் அமைப்பின் தலைவர் திருப்தி தேசாய். இவர், சபரிமலைக்கு பெண்கள் சென்று சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்பதில் வெறித்தனமாகப் பணியாற்றி வருகிறார்.
முன்னர், மராட்டிய மாநிலம் சனிசிங்னாபூர் கோவில் கருவறைக்குள் பெண்கள் நுழைய 2016ஆம் ஆண்டு நீதிமன்ற வழக்கு போட்டு, அதில் வென்று, சனி பகவான் கோயில் கருவறையில் பெண்கள் நுழைய அனுமதி பெற்றார்.
இதனிடையே, பிரதமர் மோடி, மராட்டியத்தில் உள்ள சீரடி சாய்பாபா கோவில் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக ஷீரடி வருவதாக அறிவிக்கப் பட்டிருந்தது. எனவே, சபரிமலை குறித்த தீர்ப்பில் பிரதமர் மோடியின் நிலைப்பாடு என்ன என்று அறிய விரும்பிய திருப்தி தேசாய், மோடியை சந்திப்பதற்கு அனுமதி பெற்றுத் தருமாறு அகமது நகர் மாவட்ட எஸ்பி.க்கு ஒரு கடிதம் எழுதினார். அதற்கு பதில் ஏதும் வரவில்லை. எனவே, பிரதமர் மோடியின் பாதுகாப்பு வாகனங்களை ஆதரவாளர்களுடன் முற்றுகையிட்டு மறிக்கப் போவதாக அறிவித்தார்.
இதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில், நேற்று காலை அவர் கைது செய்யப்பட்டார். ஆதரவாளர்களும் கைதாகினர்.பின்னர், காவலில் வைக்கப் பட்டிருந்த திருப்தி தேசாய் செய்தியாளர்களிடம் பேசிய போது, உச்ச நீதிமன்ற தீர்ப்பின் பின்னரும் பெண்கள் சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்யமுடியவில்லை. அங்குச் செல்ல முயன்ற பெண் பத்திரிகையாளர்கள் தாக்கப்படுகிறார்கள். சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரத்தில் பிரதமர் மோடி தொடர்ந்து மவுனம் காப்பது ஏன்?
பெண்களை சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் நுழைய விடாமல் தடுப்பது பாஜக.,வினர்தான். நான் சபரிமலை சென்று தரிசிக்க முயற்சித்தால், என்னைக் கொன்று விடப்போவதாக 200-க்கும் மேற்பட்ட மிரட்டல்கள் வந்துள்ளன. பேஸ்புக் சமூக வலைத்தளத்திலும் மிரட்டல்கள் குவிகின்றன. இதற்கெல்லாம் நான் அஞ்ச மாட்டேன். தீபாவளி பண்டிகை முடியட்டும்… நான் சபரிமலை ஐயப்பன் கோவில் செல்வேன்… என்னை யாராலும் தடுக்க முடியாது… என்று கூறியுள்ளார்.
அவரது இந்தக் கருத்தோட்டமும் பேச்சும், மோடிக்கு எதிரான சதிவலையாகவே சபரிமலை விவகாரத்தில் பார்க்கப் படுகிறது.