ஜலந்தர்: கேரளாவில் கனியாஸ்திரியை கற்பழித்ததாக குற்றம் சாட்டப்பட்ட பிஷப் பிராங்கோவுக்கு எதிராக சாட்சி சொன்ன பாதிரியார் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீஸாரால் விசாரணை செய்யப் பட்டு வருகிறது. பிஷப்புக்கு எதிராக சாட்சி சொன்ன பாதிரியார் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிஷப் பிராங்கோ முல்லக்கல்லுக்கு எதிராக சாட்சி சொன்ன சர்ச்சைச் சேர்ந்த சிலரில் மிகவும் தைரியமாகப் பேசி வந்தவர் பாதர் குரியகோஸ் கட்டுதரா. கேரள கன்யாஸ்த்ரீ கற்பழிப்பு புகார் குறித்த விவகாரத்தில் போலீஸில் பிஷப்புக்கு எதிராக சாட்சி சொன்னவர். இவர் ஜலந்தரில் இன்று உயிரிழந்த நிலையில் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள ஜீஜஸ் மிஷனரியில் தங்கிய கன்யாஸ்திரி ஒருவர் பிஷப் முல்லக்கல் பிராங்கோ மீது கற்பழிப்புப் புகார் கொடுத்திருந்தார். இதையடுத்து கேரளாவில் கன்யாஸ்திரிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர். பிஷப்பை கைது செய்ய வேண்டும் என்ன குரல் கொடுத்தனர். நெருக்கடி ஏற்பட்டதால், போலீஸார் பிஷப்பைக் கைது செய்து விசாரித்தனர். அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் அளித்தது. வெளியில் வந்த அவருக்கு பாதிரியார்கள் பலத்த வரவேற்பு கொடுத்தனர்.
இந்நிலையில் கேரளாவை சேர்ந்த பாதிரியார் குரியகோஷ் பஞ்சாப் மாநிலம் ஹோசியாபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு செயின்ட்பால் கான்வென்ட் பள்ளியின் விடுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். போலீசார் அவர் உடலை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிஷப்புக்கு எதிராக சாட்சி அளித்தவர் என்பதால், அவரது சாவில் மர்மம் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. குரியகோஷ் குடும்பத்தினர் மற்றும் அவரது சகோதரர் ஜோஸ் கட்டுதரா ஆகியோர் இது குறித்துக் கூறுகையில் குரியகோஷ்சுக்கு அண்மைக் காலமாக கொலை மிரட்டல் இருந்த வந்தது. குறிப்பாக சர்ச்சைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து அவரை மிரட்டி வந்தனர். இதனால் அவர் மரணம் குறித்து சந்தேகம் எழுகிறது. போலீசார் முழு விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.