பம்பை : சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குச் செல்ல 539 பெண்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரும் 17ஆம் தேதி தொடங்கும் மண்டலபூஜை சீசனின் போது அய்யப்பனை தரிசிக்க, 3 லட்சம் பேர் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்துள்ளனர். இவர்களில் 539 பேர் பெண்கள் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
சபரிமலையில் தரிசனம் செய்வதற்காக திருப்பதியைப் போல், ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் முறையை போலீஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர். அந்த வலைத்தளம் மூலம், சுமார் 3 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனராம். அவர்களில் 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட 539 பெண்கள் முன்பதிவு செய்துள்ளனர்.
கார்த்திகை மாதம், மண்டல பூஜைக்காக நவம்பர் 17 ம் தேதி சபரிமலை அய்யப்பன் கோயில் நடைதிறக்கப்படுகிறது. இந்த நேரத்தில், முன்பதிவு செய்யாத பெண்களும் கூட அதிகம் பேர் சபரிமலைக்கு வர வாய்ப்பு உள்ளதாகக் கூறப் படுகிறது.
கேரள மாநிலத்தை முற்போக்கு மாநிலமாக தக்க வைப்பதையே விரும்புகிறேன் என்று கேரள முதல்வர் பிணரயி விஜயன் கூறியுள்ளார். சபரிமலைக்கு அனைத்து வயதுப் பெண்களும் வந்து அங்கே இருக்கும் தெய்வமான ஐயப்பனை பக்தியுடன் கும்பிட்டு, அருள் பெற்றுச் செல்வதுதான் முற்போக்குத் தனம் என்பது முதல்வர் பிணரயி விஜயனின் முற்போக்குத் தனமாக இப்போது பரிணாமம் பெற்றிருக்கிறது என்ற விமர்சனம் எழுந்துள்ளது.