சபரிமலையில் கனமழை பெய்து வரும் நிலையில் புயல் எச்சரிக்கை அறிவிப்பு வேறு விடுக்கப் பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்துவோம் என்று முழு முனைப்புடன் கேரள அரசு ஈடுபட்டுள்ளது. பந்தள மகாராஜா குடும்பத்தினரோ, 10 முதல் 50 வயதுள்ள பெண்களை சபரிமலைக்கு அனுமதிக்க மாட்டோம் என்று கூறியுள்ளனர்.
இந்து இயக்கங்கள் முழு மூச்சுடன் அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக செயலில் இறங்கியுள்ளன. இதனால், போலீஸ் படைகளைக் கொண்டு பக்தர்களை சிதறடிக்க மாநில அரசு திட்டம் இட்டு வருகிறது. இது சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தக் கூடும் என்பதால், மாநில அரசுக்கு இக்கட்டான சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை நடை திறக்கப் படுகிறது. இதை முன்னிட்டு, பக்தர்கள் பெருமளவில் பம்பையில் கூடியிருக்கும் நிலையில், அங்கே 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. தற்போது, சபரிமலையில் கனமழை பெய்து வரும் நிலையில் புயல் தாக்கக்கூடும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் பக்தர்களிடையே பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
முன்னதாக, இரு மாதங்களுக்கு முன்னர் பம்பை ஆற்றில் கனமழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, ஆறே உருக்குலைந்து போனது. அதற்கு சபரிமலை ஐயப்பனின் கோபமே காரணம் என்று கேரளத்தவர்கள் பலர் கருத்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.