கொச்சி: சபரிமலையில் போலீசாரின் செயல்பாடுகள் பக்தர்களின் மனதில் பெரும் பயத்தை ஏற்படுத்தி இருப்பதாக நீதிமன்றம் கருதுவதாக உயர் நீதிமன்றம் இன்று தெரிவித்தது. மேலும் சபரிமலையில் 144 தடை உத்தரவு போடுவதற்கான காரணம் என்ன என்பது குறித்த விளக்கத்தை தர வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில், ஐஜி விஜய் சஹாரே சபரிமலை நிலவரம் குறித்து ஓர் அறிக்கையை சமர்ப்பித்தார்! சபரிமலையில் 144 தடை உத்தரவு போடப்படுவதன் அவசியம் குறித்து அவர் கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். மேலும், பக்தர்களை குறிவைத்து 144 தடை உத்தரவு போடப் படவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
ஆனால் நீதிமன்றம் இதுகுறித்து கருத்து தெரிவித்த போது சபரிமலையில் உண்மையாக நடக்கும் நிகழ்வுகளுக்கும், இந்த அறிக்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லாமல் இருக்கிறது என்று தெரிவித்தது. சபரிமலை நம்பிக்கையாளர்கள் மீது போலீசார் அடக்குமுறையை ஏவி விடுகின்றனர் என்று கூறிய நீதிமன்றம் மும்பையில் இருந்து சபரிமலைக்கு வந்த பக்தர்கள் ஏன் சபரிமலை செல்லாமல் பாதி வழியிலேயே திரும்பினர் என்பது குறித்தும் விளக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தது!