சபரிமலை சன்னிதானத்தில் பக்தர்கள் வருகை குறைவு காரணமாக வருமானமும் குறைந்துள்ளது. மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு, தொடர்ந்த ஒரு வார காலத்தில் மிகப்பெரிய அளவில் சபரிமலை வருமானத்தில் சரிவு ஏற்பட்டு இருப்பதாக தேவஸ்வம் போர்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
உச்ச நீதிமன்றம் அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலை செல்லலாம் என்று தீர்ப்பு வழங்கிய பின்னர் சபரிமலை கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை சரிவடைந்துள்ளது. இதற்கு போலீசாரின் கெடுபிடிகள் மற்றும் பக்தர்களை போலீசார் நடத்தும் விதம் ஆகியவை காரணம் என்று கூறப் படுகிறது.
முன்பெல்லாம் மண்டல பூஜை காலங்களில், ஒரு நாளைக்கு 80 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம் வரையிலான பக்தர்கள் ஒவ்வொரு நாளும் சபரிமலைக்கு வந்து கொண்டிருப்பார்கள் கடந்த வருடம் கூட நாளொன்றுக்கு ஒரு லட்சம் பேர் வீதம் மண்டல பூஜை காலத்தில் சபரிமலைக்கு வந்ததாக பதிவேடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் இந்த வருடம் நவம்பர் மாதம் 16ஆம் தேதி சபரிமலை நடை திறந்த பின்னர் பக்தர் வருகையில் மிகப் பெரும் சரிவு ஏற்பட்டு இருக்கிறது. வியாழக்கிழமை நேற்று இரவு வரை மொத்தமே ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் மட்டுமே சபரிமலைக்கு வருகை தந்ததாகக் கூறப்படுகிறது.
உண்டியலில் பக்தர்கள் போடும் வருமானம் 33 சதவிகிதம் அளவுக்கு குறைந்து உள்ளது. திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு ஆணையர் என்.வாசு இது குறித்து கூறிய போது சபரிமலையில் வரும் கூட்டம் மிகப் பெரிய அளவில் குறைந்துள்ளது அது பின்வரும் காலங்களில் அதிகரிக்கும் என்று நம்புகிறோம். சென்ற வருடம் மட்டும் 6 கோடி பக்தர்கள் சபரிமலைக்கு வந்தனர். அதன் மூலம் 255 கோடி ரூபாய் வருமானம் ஈடுபட்டது… என்று கூறினார்.
சபரிமலை தேவசம் போர்டு அதிகாரிகள் கூறியபோது, இந்த வருடம் மிகப்பெரிய அளவில் உண்டியல் வருமானம் சரிந்துள்ளது பல்வேறு மாநிலங்களில் இருந்து சபரிமலைக்கு பக்தர்கள் கொண்டு வரும் இருமுடிக் கட்டு, அரிசி ஆகியவையும் சரிந்துள்ளது. இதனால் அரிசி சேகரிப்பும் மிகப் பெருமளவில் சரிந்துள்ளது. வழிபாட்டுக்காக அரிசி சேகரிக்கப்பட்டு ஏலம் விடப்படும். இந்த வருடம் அரிசி போடுவது குறைந்துள்ளது.
சன்னிதானத்தில் பத்துக்கும் மேலான அரிசி சேகரிப்பு மையங்கள் சென்ற வருடம் இருந்தன. ஒவ்வொரு கவுண்டரும் ஒரு டிரக் நிறைய ஒவ்வொரு நாளைக்கும் அரிசியை சேகரித்து எடுத்துச் சொல்லும். ஆனால் கடந்த ஒரு வார காலத்தில் ஒரு சில மூட்டைகளே அரிசி சேர்கிறது.
மேலும் தேவசம் போர்டுக்கு மிகப் பெரும் வருமானத்தை ஈட்டித் தரும் வியாபாரிகள் போடக்கூடிய கடைகளுக்கான ஏலம் இந்த முறை அதிகம் நடைபெறவில்லை. 40 சதவிகிதத்துக்கும் அதிகமான இடம் காலியாகவே இருக்கிறது. கடந்த வருடம் ஏலம் போட்ட உடனேயே அனைத்து கடைகளும் ஏலத்தில் எடுக்கப் பட்டன. ஏலத்துக்கு மிகப் பெரும் போட்டியே நடந்தது. ஆனால் இந்த முறை ஏலத்திற்கு பெரிய அளவில் ஆதரவு இல்லை. தேவஸ்வம் போர்டு இந்த முறை 35% அளவுக்கு கடைகளுக்கான வாடகையை குறைத்த போதிலும் ஏலம் எடுக்க அதிகம் பேர் முன்வரவில்லை
அடுத்து. சபரிமலை தேவஸ்தானத்துக்கு அதிக அளவில் வருமானம் ஈட்டித்தருவது அரவனை, அப்பம் விற்பனை. இவற்றின் மூலமான வருமானம், இந்த வருடம் கடுமையாக சரிந்துள்ளது. இதனால் அப்பம் அரவணை தயாரிப்பை பெருமளவு குறைந்துள்ளது தேவஸ்வம் போர்டு.
மேலும் சபரிமலைக்கு பாதுகாப்புக்காக வரும் போலீசாருக்கு உணவு தயாரித்து கொடுப்பதில் பெரும்பகுதியை செலவிடுகிறது தேவஸ்வம் போர்டு. கடந்த வருடம் 2000 போலீசார் மட்டுமே மொத்தமாக பாதுகாப்புக்கு இருந்த நிலையில் இந்த வருடம் சந்நிதிதானத்தில் மட்டும் அது இரு மடங்குக்கும் அதிகமாக தொடர்ந்து இருப்பது தேவஸ்வம் போர்டுக்கு கவலை தரும் அம்சம்.