திட்டக்குடியை அடுத்த பெண்ணாடம் அருகே வெள்ளாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் இரண்டு மாவட்டத்தை இணைக்கும் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. 60க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இதனால் அவதி.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த பெண்ணாடம் அருகே உள்ள சவுந்திர சோழபுரம் கிராமத்தில் உள்ள வெள்ளாற்றின் குறுக்கே அரியலூர் மாவட்டம் கோட்டைக்காடு கிராமத்தை இணைக்கும் தரைப்பாலம் உள்ளது.
கடந்த 3 நாட்களாக கடலூர் மாவட்டம் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் விடாது பெய்த மழையினால் ஆணாவாரி ஓடை மற்றும் உப்பு ஓடையிலிருந்து மழை நீர் வெள்ளமாகப் பெருக்கெடுத்து வெள்ளாற்றின் குறுக்கே இருந்த தரைப்பாலத்தை நேற்று இரவு அடித்துச் சென்றது.
இதனால் கடலூர் மாவட்டத்திலிருந்து அரியலூர் மாவட்டம் முள்ளுக்குறிச்சி, ஆதனக்குறிச்சி, இடையக்குறிச்சி, முதுகுளம், புதுப்பாளையம், பாசி குளம், ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் ஆகிய 60க்கும் மேற்பட்ட கிராமத்திற்கு செல்லும் பொதுமக்கள் தரைப்பாலம் உடைந்ததால் 40 கிமீ சுற்றி வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.