காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர் விலாஸ்ராவ் முத்தம்வர் என்பவர், மோடியின் தந்தை பெயர் என்ன என்று யாருக்காவது தெரியுமா என்று கேள்வி எழுப்பி சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார்.
பிரதமர் மோடி குறித்து காங்கிரஸின் மூத்த தலைவர்கள் தரம் கெட்ட வகையில் பேசி வருவது தொடர்கதையாகி விட்டது. காங்கிரஸின் மூத்த தலைவர் ராஜ் பாபர், சி.பி.ஜோஷியைத் தொடர்ந்து விலாஸ்ராவ் முத்தம்வரும் சர்ச்சைக்குரிய வகையில் மோடியைத் தாக்கிப் பேசியுள்ளார். ஆனால் இவ்வாறான பேச்சுக்களெல்லாம் அறிவுகெட்ட தனம்தான் வேறில்லை என்று கூறியுள்ள காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா, காங்கிரஸில் தன் ஸ்லீப்பர் செல்களை பாஜக., பெற்றிருக்கிறதா என்ன? என்று ஆச்சரியப்பட்டுள்ளார்.
இது குறித்து செய்தியைப் பகிர்ந்து கொண்டுள்ள ஒமர் அப்துல்லா, இந்தக் கேள்வியை தனது டிவிட்டர் பக்கத்திலும் எழுப்பியுள்ளார்.
5 மாநில சட்டசபை தேர்தலை ஒட்டி பாஜக., மற்றும் காங்கிரஸ் தரப்பில் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நடிகருமான ராஜ் பாப்பர், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, பிரதமர் மோடியின் தாயினுடைய வயதை விரைவில் தொட்டு விடும்’ என்று பேசினார். இதற்கு மறைமுகமாக பதிலளித்த மோடி, காங்கிரசுக்கு என்னை எதிர்க்க திராணியில்லை அதனால்தான் என் தாய் பற்றி பேசுகின்றனர்’ எனக் கூறினார்.
தொடர்ந்து, காங்கிரஸின் மூத்த தலைவறான சி.பி.ஜோஷி, பிராமணர்கள் மட்டுமே ஹிந்து மதம் பற்றி பேச வேண்டும். மோடி, உமா பாரதி போன்றவர்கள் பேசக் கூடாது’ எனக் கூறினார். இவரது ஜாதி ரீதியான பேச்சுக்கு பாஜக.,வில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் ராகுல் இந்த விவகாரத்தில் தலையிட்டு ஜோஷியை வருத்தம் தெரிவிக்க வைத்தார்.
இப்போது மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸின் மூத்த தலைவர் முன்னாள் மத்திய இணை அமைச்சர், விலாஸ்ராவ் முத்தம்வர் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய வீடியோ இப்போது வைரலாக பரவி வருகிறது. பாஜக.,வின் தேசிய தகவல் மற்றும் தொழில்நுட்ப பிரிவின் பொறுப்பாளர் அமித் மால்வியா டுவிட்டரில் வெளியிட்ட அந்த வீடியோவில், ”ராகுல் அரசியலுக்கு வரும் முன்பே, அவரது ஐந்து தலைமுறைகள் குறித்து மக்களுக்கு தெரியும். அவரது தந்தை ராஜிவ் என்பதும், அவரது பாட்டி இந்திரா என்பதும், அவரது கொள்ளுத் தாத்தா ஜவாஹர்லால் நேரு என்பதும் மக்களுக்கு தெரியும். ஆனால், இந்த நரேந்திரா (மோடி)! அவரது தந்தை யார் என்பது இது நாள் வரை யாருக்கும் தெரியாது’ எனப் பேசியுள்ளார்.
இந்த வீடியோ இப்போது சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதை கண்டித்தே, ஒமர் அப்துல்லா ஸ்லீப்பர் செல் குறித்து பேசியுள்ளார்.
தமிழகத்தில் டிடிவி தினகரன் மூலம் மட்டுமே ஸ்லீப்பர்செல்கள் குறித்து அறிந்தனர் தமிழக மக்கள்! இப்போது, ஒமர் அப்துல்லா மூலம், தேசிய அளவில் தெரியும் சொல் ஆகிவிட்டிருக்கிறது.