விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக. ஆகியவை திமுக., கூட்டணியில் இல்லை என்று திமுக.,வின் துரை முருகன் கூறியது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மதிமுக., பொதுச் செயலர் வைகோ, தனது வருத்தத்தைப் பதிவு செய்திருக்கிறார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனோ, அது தவறாகச் சொன்னதில்லை, நேர்மறையான கருத்துதான் என்று ஒப்புக் கொண்டிருக்கிறார்.
தந்தி டிவியின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் துரைமுருகன் அப்போது அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. திமுகவில் வலுவான கூட்டணியாக அமைந்தால் சீட் ஷேரிங் அதாவது இட பகிர்வை எப்படி ஏற்படுத்திக் கொடுப்பீர்கள், சிக்கல் வராதா என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், திமுக மதிமுக கம்யூனிஸ்டுகள் என்று எல்லோரும் ஒத்த கருத்துடையவர்களாக இருக்கிறோம். இன்னும் கூட்டணி அமையவில்லை என்றார்.
40 எம்.பி., தொகுதிக்கும் இத்தனை பேருக்கும் எப்படி தொகுதிகளை பிரித்துக் கொடுப்பீர்கள் என்று கேள்வி எழுப்பப் பட்ட போது, நாங்க கூட்டணி ஏற்படுத்தி பிரிச்சு கொடுக்கும் போது பாருங்க என்று கூறினார் துரை முருகன். மேலும், இன்னும் நாங்கள் கூட்டணி அமைக்கவில்லை. காங்கிரஸ், முஸ்லிம் கட்சிகள் பழைய கஸ்டமர்ஸ் அவங்க இருக்காங்க. அத தவிர மற்றவங்க எல்லாம் நட்பு முறையில கூடி இருக்காங்க. எப்ப கூட்டணி உருவாகும் என்றால் ஒன்றாக அமர்ந்து இடம் பகிர்ந்து கொண்டு ஒரு ஒப்பந்தம் போடும் போதுதான் கூட்டணி உருவாகும். ரொம்ப நாள் கூடவே இருப்பவர்கள் திடீரென்று சீட் சரியாக வரவில்லை என்றால் முறுக்கிக் கொண்டு வெளியே போவதும் உண்டு. கடைசி நேரத்தில் எதிர்பாராமல் வருபவர்கள் சீட் ஒப்புக் கொண்டு கூட்டணியில் இணைவதும் உண்டு என்றார் துரை முருகன்.
மதிமுக., விடுதலைச் சிறுத்தைகள் இருவரும் இப்ப எங்க கூட்டணியில் இல்லை… அவங்க எங்க நண்பர்கள்.. அவ்வளவுதான்… என்றார் துரை முருகன்.
இதனிடையே, துரை முருகன் கருத்துக்கு பதிலளித்த திருமாவளவன், தி.மு.க.வுடன் கூட்டணியில் இல்லை; நட்பு மட்டுமே என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். கூட்டணி இல்லை. தோழமைக் கட்சிகளாகவே இருக்கிறோம் என்றும் அவர் தெளிவாக்கியிருக்கிறார்.
தற்போது தோழமைக் கட்சிகள், இஸ்லாமியக் கட்சிகள் எல்லோரும் ஒரே கூட்டணியாக மாற வேண்டும் என்பதைத்தான் துரை முருகன் சொல்லியிருக்கிறார் என்றும், நேர்மறையான கருத்துதான் அதில் எதிர்மறை எதுவும் இல்லை என்றும் கூறியிருக்கிறார் திருமாவளவன். இப்போதும் மக்கள் நலக் கூட்டணி என்று இருந்தீர்களே.. அதில்தான் இருக்கிறீர்களா என்று கேட்டபோது, மதவாத சக்திகளை எதிர்த்து கூட்டணி அமையும் என்பதில் விடுதலைச் சிறுத்தைகள் உறுதியாக இருக்கும் என்று பதில் அளித்தார்.
இதனிடையே, கூட்டணி குறித்து துரைமுருகன் கூறிய பதில், மதிமுகவினரை காயமடையச் செய்துள்ளது என்று வைகோ செய்தியாளர்களிடம் பேசிய போது, தனது வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டார். மேலும், துரைமுருகன் அவரது பதிலை கூறிவிட்டார், ஸ்டாலின் அவரது முடிவை சொல்லட்டும் என்று வைகோ கூறினார்.
மக்கள் நலக் கூட்டணியைக் கலைத்துவிட்டு, தேமுதிக.,வை ஜெ. அரசியல் புயலில் சிக்க வைத்து, படுபாதாளத்தில் தள்ளிவிட்டு, தற்போது திமுக., கூட்டணியில் இடம் பிடிக்க வைகோ பல முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாக திமுக.,வினர் கூறி வந்தனர். திமுக., தலைவர் கருணாநிதியைப் பார்க்க வந்த போது செருப்பு வீசி கோபத்தை வெளிப்படுத்தி அவமானப் படுத்தினர். ஸ்டாலினுக்கு எதிராக வந்துவிடுவார் என்ற காரணத்தால்தான் திமுக.,வில் இருந்து வைகோ ஓரங்கட்டப் பட்டு வெளியேற்றப் பட்டார் என்பதால் மதிமுக.,வினரும் வைகோவின் நடவடிக்கையை பெரிதாக வரவேற்கவில்லை.
இந்நிலையில் துரைமுருகனின் ஒரு டிவி பேட்டி., ஒரு ஒட்டுமொத்த குழப்பத்தையும் ஏற்படுத்தி நாறடித்துக் கொண்டிருக்கின்றது!