ராமேஸ்வரம்: அம்பானிக்காக ஆகம விதி மீறலா என்று கேட்டு ராமேஸ்வரத்தில் சர்ச்சை கிளம்பியுள்ளது.
செவ்வாய்க்கிழமை நேற்று ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு வந்திருந்த தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்காக, ஆகம விதிகள் மீறப்பட்டதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன.
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி அவரது மகன் ஆனந்த் அம்பானி ஆகியோர் நேற்று மதியம் 12 50க்கு ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்தனர். அவர்களை கோவில் ஆணையர் மங்கையர்க்கரசி நந்தி மண்டபத்தில் வைத்து வரவேற்று அழைத்துச் சென்றார்.
அம்பானியின் மகள் இஷாவின் திருமணம் தொடர்பாக சிறப்பு பூஜைகளைச் செய்துவிட்டு, ஆலயத்தில் அழைப்பிதழை சமர்ப்பிப்பதற்காக அவர்கள் வந்தனர்.
இருவரும் ஸ்வாமி தரிசனம் செய்துவிட்டு 1.50க்கு திரும்பினர். பொதுவாக, கோவிலில் உச்சிகால பூஜை முடிந்ததும் மதியம் ஒரு மணிக்கு நடை அடைக்கப்பட்டு மாலை 3.30க்கு மீண்டும் திறக்கப்படும். ஆனால் மதியம் 2 மணி வரை கோயில் திறந்திருந்தது என்று இப்போது சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இந்து முன்னணி மாவட்ட துணைத் தலைவர் சரவணன் இது குறித்துக் கூறிய போது. கோயிலைக் கட்டிய மன்னர்கள் வந்த போது கூட, ஆகம விதியை மீறாமல் தரிசனம் செய்ததாக வரலாறு இருக்கிறது. ஆனால் தொழிலதிபர் ஒருவரின் தரிசனத்துக்காக மதியம் 2 மணி வரை கோயில் நடை திறக்கப் பட்டிருந்தது நிச்சயமாக ஆகம விதிக்குப் புறம்பானதுதான். இதற்காக அறநிலையத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அம்பானி வந்து போன பின்னர் இப்போது இது சர்ச்சையை கிளப்பியுள்ளது