சென்னை, திருச்சி ரயில்வேயில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பரிசுகள் வழங்கி, ஐஜி பொன் மாணிக்கவேல் பாராட்டு தெரிவித்தார். இன்றுடன் பணி ஓய்வு பெறும் ஐ.ஜி. பொன் மாணிக்கவேலுக்கு ரயில்வே பாதுகாப்புப் படையினர் சிறப்பு மரியாதை அளித்தனர்.
தமிழக ரயில்வே காவல்துறை ஐ.ஜி. பொன் மாணிக்கவேல், சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவையும் கவனித்து வருகிறார். வெளிநாடுகளிலும், உள்நாட்டிலும் பதுக்கப்பட்ட தமிழக சிற்பங்களையும், களவாடப்பட்ட கோவில் சிலைகளையும் அவர் மீட்டெடுத்து கோவில்களிலேயே மீண்டும் கொண்டு சேர்த்தார்.
இன்றுடன் அவர் பணி ஓய்வு பெறும் நிலையில், ரயில்வே பாதுகாப்பு படையினர், அவருக்கு சிறப்பு மரியாதை தரும் நிகழ்ச்சியை நேற்று பெரம்பூரில் நடத்தினர். அப்போது ரயில்வே பாதுகாப்பு படையில் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு பொன்மாணிக்கவேல் வெகுமதி அளித்து பாராட்டினார்.
15 ஆண்டுகளுக்கு முன் நடந்த வழக்கு ஒன்றையும், அப்போது அவர் அதைக் கையாண்ட விதம் குறித்தும் ரயில்வே பாதுகாப்புப் படைக் காவலர்களுடன் பகிர்ந்துகொண்டார். இறுதியாக தாமும் தங்களைப் போல் ஒரு காவலர்தான் என்பதால், புகழ்ந்து பேசி புல்லரிக்கச் செய்ய வேண்டாம் எனவும் பொன். மாணிக்கவேல் நகைச்சுவை ததும்ப கேட்டுக் கொண்டார்.
இன்று பணி ஓய்வு பெறும் பொன் மாணிக்கவேல் சென்னை எழும்பூரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.
இந்நிலையில், அவர் கவனித்து வந்த சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவுக்கு புதிய ஐ.ஜி.யாக அபய்குமார் சிங்கை நியமித்துள்ளது தமிழக அரசு.
சிலைக் கடத்தல் பிரிவு காவல்துறை அதிகாரி பொன் மாணிக்கவேல் இன்று பணி நிறைவு ஓய்வு பெறுவதையொட்டி அவர் ஆற்றிய பணியை பாராட்டும் விதமாக குமரி மாவட்டம் திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் பெருமாள் கோவிலில் பொன் மாணிக்கவேல் பெயருக்கு சிறப்பு அர்ச்சனை செய்து அப்பகுதி மக்கள் வாழ்த்துகள் தெரிவித்தார்கள்.