கண்ணுார்: கேரள மாநிலம் கண்ணூர் அருகே 10 ஆம் வகுப்பு பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், மாணவியின் தந்தை, மார்க்சிஸ்ட் கட்சியின் இளைஞர் அணி தலைவர் உட்பட 12 பேர் மீது ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பரசினிகடவு பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக அவரது தாயார் கண்ணூர் மகளிர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த மாணவியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறியதைக் கேட்டு போலீஸார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அந்த மாணவிக்கு பேஸ்புக் மூலம் ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண் அழைப்பின் பேரில் அருகில் இருந்த ஒரு லாட்ஜுக்கு சென்றுள்ளார். அங்கே, தனது பள்ளி சீருடையை மாற்றி விட்டு வேறு உடை அணிவதற்காக, அந்த மாணவி அறைக்குள் சென்ற போது, அந்த மாணவியை லாட்ஜ் அறையில் வைத்து பூட்டி விட்டு அந்தப் பெண் வெளியேறியுள்ளார்.
சிறிது நேரத்தில் அந்த அறைக்கு 5 இளைஞர்கள் வந்துள்ளனர். அவர்கள் அந்த மாணவியை கூட்டு பலாத்காரம் செய்ததுடன், அவரை தங்களது செல்போன்களில் ஆபாசப் படமும் எடுத்துள்ளனர். அதைக் காட்டி மாணவியை மிரட்டி மேலும் 20 பேர் அவரை பலாத்காரம் செய்துள்ளனர்.
இந்தச் சம்பவங்களை எவரிடம் சொல்வது என்று தெரியாமல் பயந்து போயிருந்த மாணவி, தனது சகோதரனிடமே தனக்கு நடந்த பயங்கரத்தைப் பற்றிக் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ந்த அவரது சகோதரன், அந்த நபர்களை சந்தித்து தட்டிக் கேட்டுள்ளார். ஆனால் அவர்களோ அந்த சகோதரருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதன் பின்னர் விவகாரம் போலீஸாருக்குச் சென்றது. போலீசாரிடம் தனக்கு நடந்ததைக் கூறிய மாணவி கதறி அழுதுள்ளார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர். அதன்படி மாணவியை பலாத்காரம் செய்ததாக, சந்தீப், சம்சுதீன், அயூப், சமீர் மற்றும் லாட்ஜ் மேலாளர் பவித்திரன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் இது தொடர்பாக 19 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 8 பேர் கம்யூனிஸ்ட் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில், இந்த வழக்கில் 12 பேர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.