சென்னை: சசிகலா நேரில் ஆஜராக வேண்டும் என எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, சென்னை உயர்நீதிமன்றம ரத்து செய்தது.
ஜெ.ஜெ. டிவிக்கு வெளிநாட்டில் இருந்து எலக்ட்ரானிக் உபகரணங்கள் வாங்கியதில், சசிகலா, பாஸ்கரன் ஆகியோர், அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் கடந்த வருடம் பாஸ்கரன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து பெங்களூரு சிறையில்அடைக்கப் பட்டுள்ள சசிகலாவை, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக ஆஜர்படுத்தி குற்றச்சாட்டு பதிவு செய்யப் பட்டது.
ஆனால், ஆவணத்தில் கையெழுத்திடுவது உள்ளிட்ட சில நடைமுறைகள் பின்பற்றப்பட வில்லை என்பதால் மறு குற்றச்சாட்டு பதிவு செய்வதற்காக நவ.30 ஆம் தேதி அவரை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
அன்றைய தினம் சசிகலா ஆஜராகவில்லை என்பதால், வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப் பட்டது. மீண்டும் நடந்த விசாரணையின் போது, பாஸ்கரன் மட்டும் ஆஜரானார்.
அப்போது சசிகலாவுக்கு உடல் நிலை சரியில்லை என்பதால் அவரை நேரில் ஆஜர்படுத்த இயலவில்லை என பெங்களூரு சிறை நிர்வாகம் தரப்பில் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி அந்த வழக்கை வரும் டிச.13ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து, அன்று சசிகலாவை நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். ஆனால் இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதிகள் சசிகலா நேரில் ஆஜராக பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தனர். மேலும் பெங்களூரு சிறையில் இருந்து, ‘வீடியோ கான்பிரன்ஸ்’ மூலம் ஆஜராக உத்தரவிட்டனர்.