ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் இன்று ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவுக்குப் பின்னே பெரும் அரசியல் ஒளிந்திருப்பதாகக் கூறப் படும் நிலையில், 5 மாநில சட்டமன்ற தேர்தல்கள் முடிந்த பின்னர் அவரது ராஜினாமா முறையாக செய்யப் பட்டிருக்கிறது என்று விமர்சனம் முன்வைக்கப் படுகிறது.
மத்திய அரசின் திட்டங்களுக்கு தேவையான நிதியை விடுவிக்க வேண்டும் என்று அரசு கூறியது, வங்கிகள் வராக் கடன் விவகாரத்தில் நிகழ்ந்த கசப்பான சம்பவங்கள் என பல்வேறு விஷயங்கள் இதன் பின்னணியில் கூறப்பட்டு வருகின்றன.
ஆனால், உர்ஜித் படேல் ராஜினாமா செய்யப் போவதாக ஊடகங்களில் முன்பே தகவல்கள் கசிந்தன. இந்நிலையில் அவர் இன்று ராஜினாமா செய்துள்ளார்
அவரது ராஜினாமாவை முன்வைத்துக் கூறப் படும் அரசியல் கருத்துகள்…
நாட்டுக்காக உர்ஜித் படேல் சேவையாற்றியதை மத்திய அரசு பாராட்டுகிறது. உர்ஜித் படேல் மேலும் பல ஆண்டுகளுக்கு பொது சேவையாற்ற வாழ்த்துக்கள்.
- நிதி அமைச்சர் அருண் ஜெட்லி
உர்ஜித் படேல் ராஜினாமா வியப்பளிக்கிறது; அவரை நாம் இழக்கிறோம்.
-ஆடிட்டர் குருமூர்த்தி
உர்ஜித் படேல் ராஜினாமா செய்ததற்கு இந்தியர்கள் அனைவரும் கவலைப்பட வேண்டும்.
- முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன்
உர்ஜித் படேலின் ராஜினாமா நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதகமாக அமையும். பார்லி., தேர்தலுக்கு பின்னர் உர்ஜித் படேல் ராஜினாமா செய்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஜூலை மாதம் வரையிலாவது பதவியில் இருந்திருக்கலாம்.
- சுப்பிரமணியன் சாமி
உர்ஜித் படேலில் ராஜினாமா வருத்தம் அளிக்கிறதே தவிர வியப்பு அளிக்கவில்லை. சுயமரியாதை உள்ளவர்கள்ளோ, அறிவார்ந்தவர்களோ இந்த அரசாங்கத்தில் வேலை செய்ய முடியாது.
- முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம்
பா.ஜ., அரசில் ரிசர்வ் வங்கி ஆளுநர் நீண்ட நாட்களுக்கு நீடிக்க மாட்டார் என ஏற்கனவே கூறியிருந்தோம்.
- காங்கிரஸ் தலைவர் ராகுல்