பழனி முருகன் கோயில் உத்ஸவர் விக்ரஹம் செய்ததில் முறைகேடு நிகழ்ந்தது தொடர்பான வழக்கு விசாரணையை மீண்டும் தொடரவுள்ளதாக பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார். இது அறநிலையத்துறையினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பழனி முருகன் கோயிலுக்கு செய்யப்பட்ட 200 கிலோ எடை கொண்ட உத்ஸவர் முருகன் விக்ரஹத்தில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த முறைகேடு தொடர்பான விசாரணையை அடுத்து முத்தையா ஸ்தபதி இணை ஆணையர்கள் புகழேந்தி, தேவேந்திரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு கும்பகோணம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள பொன்.மாணிக்கவேல் பழனி முருகன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார்.
அப்போது செய்தியாளர்களிடத்தில் பேசிய அவர், பழனி கோயில் உத்ஸவர் ஐம்பொன் முருகன் சிலை முறைகேடு வழக்கின் விசாரணையை அடுத்த வாரம் துவங்கவுள்ளதாகவும், பழனியில் தங்கியிருந்து தன்னுடைய நேரடி மேற்பார்வையில் மீண்டும் விசாரணை நடைபெறும் என்றும் கூறினார்.
பொன்.மாணிக்கவேல் ஓய்வை அடுத்து சிலை முறைகேடு வழக்குகள் கிடப்பில் போடப்படும் என அறநிலையத்துறை ஊழியர்கள் எண்ணியிருந்த நிலையில் மீண்டும் பொன்.மாணிக்கவேல் விசாரணையை துவங்க உள்ளதாக தெரிவித்துள்ளது அறநிலைய துறை வட்டாரத்தில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.