சென்னை: வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியிருப்பதால், வட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. பெய்ட்டி என்று பெயரிடப் பட்டுள்ள இந்த புயலால் மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் செய்தியாளர்களிடம் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் கூறியபோது…
தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்னைக்கு தென் கிழக்கே 690 கி.மீ., தொலைவில் உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அது 260 கி.மீ., தொலைவுக்கு நகர்ந்துள்ளது.
மணிக்கு 11 கி.மீ., வேகத்தில் நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது.
புயல் நெருங்கி வருதால் இப்போதே மணிக்கு 20 கி.மீ., வேகத்தில் தரைக்காற்று வீசுகிறது.
தமிழகத்தின் வடக்கு கடற்கரைக்கு 200 கி.மீ., தொலைவு வரை புயல் வரும்! அப்போது மணிக்கு 45 முதல் 55 கி.மீ., வேகத்தில் காற்று வீசும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.
சென்னையைப் பொறுத்தவரை அவ்வப்போது தரைக்காற்றின் வேகம் அதிகரிக்கும். ஞாயிறு அன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று கூறினார் பாலசந்திரன்.
இந்தப் புயலுக்கு நாடுகள் வரிசைப்படி தாய்லாந்து ‘பெய்ட்டி’ என பெயர் சூட்டி உள்ளது.
பெய்ட்டி புயல் சின்னம் கரையை நெருங்குவதால் தமிழகத்தின் துறைமுகங்களில் புயல் எச்சரிகை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன.
ஞாயிறு இரவு 9 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறியது. ஆந்திராவை நோக்கி மணிக்கு 17 கி.மீ., வேகத்தில் நகரும் பெய்ட்டி புயல், 17ஆம் தேதி அன்று மசூலிப்பட்டினம், காக்கிநாடா இடையே கரையைக் கடக்கும் எதிர்பார்க்கப் படுகிறது.