சென்னை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதியின் முழு உருவச் சிலையை காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி திறந்து வைத்தார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் அண்ணாத்துரை சிலைக்கு அருகில், கலைஞருக்கு சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்தச் சிலையின் திறப்பு விழா ஞாயிறு இன்று மாலை 5 மணிக்கு நடைபெற்றது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் துரைமுருகன், கட்சியின் முன்னணித் தலைவர்கள் விழாவுக்கு வந்தவர்களை வரவேற்றனர்.
இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கருணாநிதியின் சிலையைத் திறந்து வைத்தார்.
சிலைத் திறப்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கேரள முதலமைச்சர் பிணராயி விஜயன், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி என அண்டை மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச்செயலர் வைகோ, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலங்களவை உறுப்பினர் டி.ராஜா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சத்ருகன் சின்கா, நடிகர் ரஜினிகாந்த், பிரபு, வடிவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சிலை திறப்புக்குப் பின்னர் அங்கிருந்து சென்னை மெரினா கடற்கரைக்குச் சென்ற சோனியா காந்தி உள்ளிட்டோர் கருணாநிதியின் நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து, நந்தனம் மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.