பத்தனம்திட்ட: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் இரு பெண்களையும் திருப்பி அனுப்புமாறு மாநில அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் கடைப்பிடிக்கப்பட்டுவரும் பாரம்பரிய சம்பிரதாயத்தை மாற்றி, அனைத்து வயது பெண்களையும் தரிசனம் செய்ய அனுமதிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை அடுத்து, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐயப்ப பக்தர் குழுக்களும் இந்து அமைப்புகளும் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. மேலும், சபரிமலைக்கு வந்தே தீருவோம் என்று வீம்புக்கு வந்து விளம்பரம் தேடிக் கொள்ளும் கம்யூனிஸ நாத்திக பெண்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்புகின்றனர். இருப்பினும், உச்ச நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துவோம் என்று விடாப்பிடியாக அடம்பிடித்து வருகிறது கேரள அரசு!
கடந்த மாதம் 16-ஆம் தேதி மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் சந்நிதி நடை திறக்கப்பட்டபோது இளம்பெண்கள் சிலர் சபரிமலைக்கு வரும் முயற்சியில் இறங்கினர். அவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதாக போலீஸார் தெரிவித்தனர். ஆனால், அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சபரிமலை பாரம்பரியத்தை பாதுக்காகப் போராடும் அமைப்புகள் போராட்டம் நடத்தியதால் சபரிமலை, பம்பை, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்படுவதும் நீட்டிக்கப்படுவதுமாக உள்ளது.
வரும் டிசம்பர் 27ஆம் தேதி வரை 144 தடை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், சபரிமலை நோக்கி இரண்டு இளம்பெண்கள் இன்று காலை வந்தனர். அவர்களை அப்பச்சிமேடு பகுதியில் பக்தர்கள் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கோவிலுக்குச் செல்வதற்கு காவல்துறை அனுமதிக்கக் கூடாது என்று போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், காவல்துறை உயர் அதிகாரிகளிடம் தொலைபேசியில் பேசி, நிலவரம் குறித்து கேட்டறிந்தார். அப்போது அப்பச்சமேடு பகுதியில் உள்ள சூழ்நிலை குறித்து அமைச்சரிடம் அதிகாரிகள் எடுத்துக் கூறினர். நிலைமையைக் கேட்டறிந்த அமைச்சர், பக்தர்களால் தடுத்து நிறுத்தப்பட்ட 2 பெண்களையும் திருப்பு அனுப்புமாறு அறிவுறுத்தினார். இதை அடுத்து 2 பெண்களும் போலீசாரால் திருப்பி அனுப்பப்படுகின்றனர்..