பத்தனம்திட்டா,: ‘சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பெண்களுக்கு எங்களால் பாதுகாப்பு வழங்க முடியாது’ என கேரள போலீஸ் அதிரடியாகத் தெரிவித்துள்ளது.
கேரளாவில் உள்ள புகழ்பெற்ற தலமான சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ‘அனைத்து வயதுப் பெண்களை அனுமதிக்க வேண்டும்’ என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு கேரளா, ஆந்திரா, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்களது எதிர்ப்பை மீறி, அரசு பாதுகாப்பை வழங்குவதாகவும், சபரிமலைக்கு வரலாம் என்றும் பெண்களுக்கு அழைப்பு விடுத்தது. அதை அடுத்து, ஐயப்பன் கோவிலுக்குச் சில அமைப்புகளைச் சேர்ந்த பெண்கள் முயன்றனர். அவர்களுக்கு, கேரள அரசு, போலீஸ் பாதுகாப்பு வழங்கியது. ஆனால் பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்தப் பெண்கள் பாதி வழியில் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இதை அடுத்து, ‘சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பெண்களுக்கு இனி பாதுகாப்பு வழங்க முடியாது’ என கேரள போலீசார் தெரிவித்துள்ளனர்.
கேரள டி.ஜி.பி., லோக்நாத் பெஹ்ராவிடம், போலீசார் அளித்த அறிக்கையில், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பெண்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் விளம்பரத்துக்காகவே வருகின்றனர். இந்தப் பெண்களை கோவிலுக்குள் அனுமதிப்பதால், விபரீத விளைவுகள் ஏற்படக்கூடும். எனவே, சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியாது என்று தெரிவித்துள்ளனர்.