சென்னை: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு பிரிவு அதிகாரி பொன்.மாணிக்கவேல் மீது இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் டிஜிபி ராஜேந்திரனிடம் புகார் அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர்கள் பேசுகையில், 60 ஆண்டுகளுக்கு முன்பும் சிலைகள் திருடப்பட்டுள்ளன. தற்போதும் திருடப்பட்டுள்ளன. 60 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்திற்கும் எங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. நாங்கள் எந்த விசாரணைக்கும் தயாராக உள்ளோம் என்று கூறினர்,
மேலும், சிலைக் கடத்தல் தொடர்பான எந்த வழக்கிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. வழக்குகளில் உண்மையும் இல்லை.
கோயில்களில் உள்ள அறங்காவலர்களே சிலைகளுக்கு பொறுப்பு.
இதுவரை 10 அறநிலையத்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர், இந்து அறநிலையத்துறையே முடக்கப்படும் அபாயம் உள்ளது.
முதல் தகவல் அறிக்கைகளை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என பொன்.மாணிக்கவேல் மீது இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் டி.ஜி.பி.யிடம் புகார் அளித்தனர்.
இந்நிலையில், அறநிலையத்துறை அதிகாரிகளின் பின்னணி குறித்தும், இந்தப் புகாரின் பேரில் நடைபெறும் அரசியல் குறித்தும் சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பகிரப் பட்டு வருகின்றன.
பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக உடன் பணியாற்றும் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரே கூறிய புகார்களை அடுத்து, உண்மையை நேர்மையை வாய்மையை போட்டு மிதிக்கும் வகையிலும், உண்மைகளை மூடி மறைக்கும் விதத்திலும் பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி, சிலைக்கடத்தல் வழக்குகளை திசை திருப்ப போலீஸுக்குள்ளேயே இருக்கும் திருடர்களும், கோவிலுக்குள் அதிகாரிகள் என்ற பெயரில் இருக்கும் திருடர்களும் முயற்சி செய்து வருவதாக சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பகிரப் படுகின்றன.
அதாவது அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் திருடு போன சிலைகளுக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது.. அறுபது ஆண்டு கால கட்டத்திற்குள் , அதாவது அறநிலைய துறையின் கட்டுப்பாட்டிற்குள் கோவில்கள் வந்த பின்பு சிலைகள் திருட்டு போயுள்ளன என்பதை ஒப்புக்கொள்கிறார்கள் இவர்கள். ..சரி எவையெல்லாம் அறுபது ஆண்டுகள் முன்னர் திருடு போயின, அந்த துறையின் அதிகாரிகள் என்கிற முறையில் அவற்றை மீட்க என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்க பட்டன. அதன் பிறகும் தொடர்ந்து திருடு போய்க்கொண்டேயிருக்க எப்படி அனுமதிக்கிறீர்கள், அல்லது தடுக்காமல் வேடிக்கை பார்க்கிறீர்கள் ? இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியது எங்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கி, கோவிலின் வருமானத்தில் கிம்பளமும் வாங்கி கொழுத்து போய்க்கிடக்கும் உங்களது கடமை. அரசு கண்டும் கொள்ளாது, என்றும் கொல்லாது… ஆனால் தெய்வம் கண்டிப்பாக நின்று கொன்றே தீரும்… என்று கூறுகின்றனர் சமூக வலைத்தள மேய்ப்பர்கள்!