சர்வதேச எல்லைப் பகுதியை கடந்து, தங்கள் நாட்டு கடல் எல்லைக்குள் மீன்பிடிக்க வந்ததாகக் கூறி, கச்சத்தீவு கடல் பகுதியில் மீன் பிடிக்கும் இந்திய மீனவர்கள் மீது அவ்வப்போது துப்பாக்கிச் சூடு நடத்தி கொடூரங்களை நிகழ்த்தி வந்தது இலங்கை கடற்படை. இவை எல்லாம் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நிகழ்ந்த கொடூரங்கள்.
ஆனால், மோடி பிரதமர் ஆன பின்னர், இலங்கையுடனான ஒப்பந்தங்கள் வலுவடைந்தன. எல்லையை மீறி மீன்பிடிக்கும் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தக் கூடாது என்றும் கைது மட்டுமே செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப் பட்டது. இதனால், மோடி பிரதமர் ஆன கடந்த 2014 ஆம் ஆண்டுக்குப் பின்னர் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் வெகுவாகக் குறைந்து, அறவே இல்லாத நிலைக்குச் சென்றுள்ளது.
இருப்பினும், தங்கள் நாட்டு எல்லையைக் காக்கவும், மீனவர்களின் நலன் கருதியும், இரட்டை மடிவலையுடன் தங்கள் நாட்டு எல்லையில் மீன் பிடிக்கும் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தாமல் என்ன செய்வது என்று இலங்கையின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறிய கருத்துகள் பெரும் சர்ச்சையைக் கிளப்பின.
இந்நிலையில், இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது செய்யப் படுவது அவ்வப்போது நிகழ்ந்துதான் வருகிறது. இருப்பினும் இந்தக் கைதுகளின் பின்னணியில் இலங்கை மீனவர்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
கச்சத்தீவு அருகே மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது நேற்று இலங்கை மீனவர்கள் பெட்ரோல் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இலங்கை மீனவர்கள் பெட்ரோல் குண்டு வீசியதில் 50க்கும் மேற்பட்ட படகுகளின் மீன்பிடி சாதனங்கள் சேதம் அடைந்ததாக தமிழக மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.