கேள்வி: என்னங்க… ஆயிரமாயிரம் கண்கொண்டு எல்லா நேரமும் காப்பத்தறாங்கனு சொல்றீங்க. இப்படி 4 மணி நேரம் சயனம் கொண்டால் அந்த நேரத்துல யாருங்க காப்பத்தறது ?
பதில்: கடவுளின் தன்மையை மனிதன் தன் இயல்புக்கு ஏற்ப உருவாக்கி, பூஜை முறைகளை செய்து வைத்தான்.
நம் பாரத கடவுள் தத்துவ மரபு கிளைத்தது, அந்த முறையில்தான்.
இறைத் தன்மையை இயல்பான மனிதனல்லாத, மனித சக்திக்கு அப்பாற்பட்ட மனித உருவில் கண்டு தொழுது… அந்த உருவத்துக்கென ஆலயம் அமைத்து, இப்படி எல்லாம் செய்தால் சூட்சும சக்தி அந்த ஆலயத்துக்கு பெருகும் என்று கண்டு… ஆலயம் அமைத்தது நம் முன்னோர்.
இறை சக்தி என்றும் உறங்காதது. எப்போதும் அது பிரபஞ்சத்துடன் லயித்து இயங்கிக் கொண்டிருப்பது. அதை நம் முன்னோர் விஷ்ணுவின் மாயையாகக் கண்டனர்.
கோயிலில் இருக்கும் விக்ரஹ ரூபிக்கு உறக்கம் கிடையாது. ஆனால், அந்த விக்ரஹத்தை பகவானாகக் கண்டு, நைவேதனம் செய்து, பால்நிவேதனம் செய்து, பெருமானே உறக்கம் கொள்ளும். காலையில் வந்து எழுப்புகிறேன் என்று தாலாட்டித் தூங்க வைத்து திரையை சாத்தி, பயபக்தியுடன் வெளியில் வரும் அர்ச்சகனுக்குத் தெரியும்…
அந்தக் கருவறையின் சூட்சும ரகசியம்! அந்த விக்ரஹத்தின் மீது ஆறேழு கரப்பான் பூச்சிகள் ஓடிக் கொண்டிருக்கும்! அந்தக் கரப்பான் பூச்சிக்கு தெரியாதா … இது கல் அல்ல மனிதன் கும்பிடும் கடவுள் என்று?
ஆனால் காலை சந்நிதி கதவு திறந்து திரையை லேசாகி விலக்கி விளக்கு ஏற்றி கருவறைக்குள் வெளிச்சம் பாய்ச்சி, அந்தக் கரப்பான் பூச்சிகளை தட்டி விட்டு, முதல் நாள் பூமாலைகளைப் படி களைந்து, தீர்த்தத்தால் புரோக்ஷணம் செய்து… எப்படி ஒரு ராஜாவுக்கு சேவகன் அனைத்து சேவைகளையும் செய்வானோ அப்படியான மன பாவத்தில் அந்த விக்ரஹத்துக்கு சேவகம் செய்யும் அர்ச்சக சேவகனுக்குத் தெரியும்… அது விக்ரஹம் அல்ல… எப்போதும் அணுக்கத்துடன் அணுகும் நம் பகவான் என்று!
எத்தனை முறை தான் மனசு உடையும் போதெல்லாம் அந்த அர்ச்சகன் அந்த விக்ரஹத்திடம் அழுது தீர்த்து மனசாரக் கொட்டியிருப்பான்… அது விக்ரஹம் என்று நினைத்தால் அவன் அப்படிச் செய்வானா?
சொல்ல வருவது… வைகானசமும் பாஞ்சராத்ரமும் – பெருமாளை எப்படி அணுக வேண்டும் என்று சொல்கிறது. அதைப் படித்துத் தேறி பாவன பூஜை செய்பவன், இரவு அவர் தூங்குவதாகவும், காலை விழிப்பதாகவும் மதியம் ஓய்வு எடுப்பதாகவும், கால் அலம்பி, பால் குடித்து, சாப்பாடு உண்டு, தன்னை நோக்கி வரும் பக்தனை கனிவுடன் நோக்குவதாகவும்…
இவையெல்லாம் நம் சாத்திரங்கள் வகுத்துத் தந்த கடவுள் தத்துவம்.
வெறுமனே பொம்மையை வைத்து ரொம்பவும் தூய்மையான ஒரு ஹாலில் கூடி ப்ரேயர் செய்கிற தன்மை கொண்ட சர்ச்சுகள் இல்லை நம் கோயில்கள்…
எங்கே வேண்டுமானாலும் முட்டி போட்டு கையை மேலே தூக்கி இறைவனை நினைத்துத் தொழும் அருவ வழிபாடு கொண்ட இஸ்லாமியர்களுக்கானது இல்லை கோயில்கள்…
கோயில்களில் உறைபவன், அந்த அந்த ஊருக்கான ராஜா. அம்பிகை ராணி. நம் ராஜாக்கள் தங்களுக்கான அரண்மனை கட்டிக் கொள்வதை விட, ஊருக்கு ஒரு கோயில் கட்டி, அவரையே ஊருக்கான ராஜா – ராணியாக வைத்து, தாங்கள் சேவகம் செய்தார்கள்.
அங்கே இறைவன், ஒரு உருவமாக அமர்ந்து, அந்த ராஜாவுக்கு நல்ல வழி காட்டி ஆட்சி செய்தான்.
மனிதனாகப் பிறப்பவர் மரித்தே ஆக வேண்டும். ஆனால் கோயிலில் உறையும் ராஜாதி ராஜா, அப்படியே இருப்பான். அந்தக் கோயிலுக்குள் உள்ள உருவத்தை சிதைக்க மற்றவன் படையெடுத்து வந்து நாசப் படுத்தும் போது, அங்கே வெறும் விக்ரஹங்கள் மட்டும் நாசம் அடைந்ததில்லை… ஊர் மக்களின் ஒட்டு மொத்த நம்பிக்கை, ஆள்பவனின் நம்பிக்கை, கையாலாகத்தனம், தன் ராஜாதி ராஜனைக் காக்க முடியாத கோழைத்தனம் எல்லாம் வெளிப்படுகிறது.
உண்மையில் அங்கே இறைவனுக்கும் அவனுக்கும் இழையோடும் நம்பிக்கைதான், அவனுக்குள் தெம்பு கொடுத்து பகவனை ஓட ஓட விரட்டுகிறது.
கடவுளை பாரதீய மரபுப் படி, சரியாகப் பார்த்தால், இந்தக் கேள்வி எழாது!