பேட்ட மற்றும் விஸ்வாசம் படத்தின் டிரெய்லரில் வரும் வசனங்களை வைத்து அதை தனிப்பட்ட தாக்குதலாக மாற்றி சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மீம்ஸ்களாகவும், கருத்துகளாகவும் தெரிவித்து வருகின்றனர்.
இதுவே தற்போது செய்தியாகி, ஊடகங்களில் இரு தரப்புக்கும் மேலும் மேலும் போர்ச் சூழல் உருவாக்கப் பட்டு வருகிறது. வெறும் சாதாரண வசனம் என்ற நிலை போய், உள்குத்து வைத்து சொல்லப்பட்ட வசனங்களைப் போல் இவற்றை பெரிது படுத்துவதால், இயல்பான பிரச்னைகள் மழுங்கடிக்கப் பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
பொங்கலுக்கு ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் படங்கள் வெளியாகின்றன. இவற்றின் டிரெய்லர் அடுத்தடுத்து வெளியாகின. டிச.28ஆம் தேதி பேட்ட படத்தின் ட்ரெய்லர் வெளியானது. அதில் இடம் பெற்ற காட்சிகள் மற்றும் பஞ்ச் வசனங்களில் பழைய ரஜினியை பார்ப்பதாகக் கூறினர் ரசிகர்கள். பேட்ட பட டிரெய்லருக்கு போட்டியாக அஜித் நடித்த விஸ்வாசம் டிரெய்லரும் 30ஆம் தேதி வெளியானது.
இந்த இரு படங்களின் டிரெய்லர்களில் வரும் வசனங்கள் இப்போது, இதுவரை சண்டை போடாமல் இருந்து வந்த ரஜினி ரசிகர்களுக்கும், அஜித் ரசிகர்களுக்கும் மோதலை ஏற்படுத்தியுள்ளது.
பேட்ட படத்தில் ரஜினி பேசும் ‘எவனுக்காவது குடும்பம், பொண்டாட்டி, புள்ளை, செண்டிமெண்ட் இருந்தா ஓடிப்போயிடு. கொலை காண்டுல இருக்கேன்…கொல்லாம வுடமாட்டேன்’ என ரஜினி பேசும் வசனம் அஜித்தின் விஸ்வாசம் படத்தை குறிப்பிடுவதாக பற்ற வைத்தனர்.
அஜித் பேசும் ‘என் பேரு தூக்குதுரை, என் மனைவி பேரு… என் மகள் பேரு’ இது என அஜித் பேசும் வசனத்தை ரஜினி பேசும் வீடியோவோடு இணைத்து மீம்ஸாக உருவாக்கியுள்ளனர்.
ஒத்தைக்கு ஒத்தை வாடா என அஜித் பேசுவது பேட்ட படத்தை என மீம்ஸ்கள் தூள் பறக்கின்றன. சிலர், விஸ்வாசம் டிரெய்லரில் வில்லன் ‘என்கிட்ட இருக்குற பணத்துக்கு நான் நினைச்சா எல்லா ஏரியாவையும் வாங்குவேன்’ எனக்கூற, அஜித் ‘ஏறி மிதிச்சேன்னா ஏரியாவ இல்லை.. மூச்சு கூட வாங்க முடியாது’ என பேசுவது பேட்ட பட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சரை பார்த்துதான் என கொளுத்திப் போட்டனர்.
ஆக, பேட்ட, விஸ்வாசம் டிரெய்லர்கள் ரஜினி, அஜித் ரசிகர்களிடையே மோதலை ஏற்படுத்தியிருக்கிறது.