தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியது. மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 12 பேருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப் பட்டது.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய், நெல் ஜெயராமன் மற்றும் கஜா புயலால் உயிரிழந்தவர்களுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. கருணாநிதி, ஏ.கே.போஸ் ஆகியோருக்கும் சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
சட்டப்பேரவையில் கருணாநிதியை ஓவராகப் புகழ்ந்து தள்ளினார் துணை முதல்வர் ஓபிஎஸ்! பரபரப்பை உண்டாக்கிய அவரது பேச்சு…
அண்ணாவின் அன்புத் தம்பி கலைஞர் என புகழாரம் சூட்டிய ஓபிஎஸ்., 94 ஆண்டுகள் நாட்டுக்காகவும், கட்சிக்காகவும் உழைத்தவர் கருணாநிதி என்று சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார்.
மனஉறுதி, எழுத்தாளர், பேச்சாளர், தமிழ் பற்றாளர், அழகு தமிழால் அனைவரையும் அரவணைத்தவர், அரசியல் மாற்று கருத்து கொண்டவர்களையும் அவரது தமிழால் ஆட்கொண்டவர் கருணாநிதி என்றார் ஓபிஎஸ்.,
அயராது உழைத்த கருணாநிதி இன்று நம்மிடையே இல்லை; கருணாநிதியின் மறைவு தமிழகத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு; அயராது உழைத்த கருணாநிதி, இன்று நம்மிடையே இல்லை என்றார் துணை முதல்வர் ஓபிஎஸ்.
சுதந்திர தினத்தன்று, முதல்வர்கள் தேசிய கொடியை ஏற்றும் உரிமையை பெற்றுத் தந்தவர் மற்றும் சமூக நீதிக்காக போராடியவர் கருணாநிதி; பல பதவிகளை வகித்த கருணாநிதி, அவையில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு சாதுர்யமாகவும், நகைச் சுவையாகவும் பதிலளிக்கும் திறன் கொண்டவர் என்று புகழாரம் சூட்டினார் அதிமுக.,வைச் சேர்ந்த துணை முதல்வர் ஓபிஎஸ்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவருக்கும், கருணாநிதி மீது கருத்து வேறுபாடு இருந்தாலும், கருணாநிதி மீது அன்பு வைத்திருந்தனர் என்று கூறி, அதிமுக.,வினரை அதிர்ச்சி அடைய வைத்தார் ஓபிஎஸ்.,!