கண்ணூர்: கேரள மாநிலம் கண்ணூரில், பாஜக., எம்.பி., மார்க்சிஸ்ட் எம்எல்ஏ ஆகியோர் வீடுகளில் கையெறி குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
கேரள மாநிலம் கண்ணூர், மார்க்சிஸ்ட்களின் கோட்டை என்று வர்ணிக்கப் படுகிறது. இங்கே மார்க்சிஸ்ட்கள் தங்கள் வன்முறை வெறியாட்டத்தை எப்போதும் வெளிப்படுத்தி வருவர். கேரளத்திலேயே அதிக அளவிலான, பாஜக., ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் மார்க்சிஸ்ட் குண்டர்களால் படுகொலை செய்யப் பட்டுள்ளதும் இந்தக் கண்ணூரில்தான்!
சபரிமலையில் பெண்கள் நுழைய அனுமதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரளா முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கண்ணூர்- பையனூரில் மார்க்சிஸ்ட் கட்சியினர் பேரணி நடத்தினர். அவர்கள் பிணரயி விஜயனுக்கு ஆதரவாகவும், இந்து இயக்கங்களை எதிர்த்தும் பேரணி நடத்தினர்.
இந்நிலையில், கண்ணூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நேற்று இரவு பாஜக., மாநிலங்களவை எம்.பி., முரளீதரன் வீட்டில் கையெறி குண்டு வீசப்பட்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
சிறிது நேரத்தில், கண்ணூர் மாவட்டத்தில் வசிக்கும் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ ஷம்ஷீர் வீட்டில் 10 மணியளவில் கையெறி குண்டு வீசப்பட்டது. இதிலும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்நிலையில், தன் வீட்டில் குண்டுவீச்சுக்கு பாஜக.,வினரே காரணம் என்று கம்யூனிஸ்ட் எம்எல்ஏ குற்றம்சாட்டினார். இது தொடர்பாக, 20 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.