ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய், 2 அடி நீள கரும்புத் துண்டு வழங்கப்படும் என கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி அறிவிக்கப்பட்டு அதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது. அதில் 2, கோடியே 1 லட்சத்து 91 ஆயிரத்து 54 கோடி குடும்ப அட்டைத்தாரர்களுக்கு இந்த பொங்கல் பரிசு வழங்க 258 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில் ஆளுநர் உரையில் பொங்கல் பண்டிகை கொண்டாடும் வகையில் இடைத்தேர்தல் நடைபெறும் திருவாரூர் தொகுதி நீங்கலாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 1000 ரூபாய் ரொக்கம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கான அரசாணை நேற்று வெளியிடப் பட்டது. மொத்தம் 1 கோடியே 97 லட்சத்து 98 ஆயிரத்து 102 அட்டைதாரர்களுக்கு ரூ.1,980 கோடி நிதி சிறப்பு திட்டத்துக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தலைமைச் செயலகத்தில் முதற்கட்டமாக 10 பேருக்கு பொங்கல் சிறப்புப் பரிசு தொகுப்பை வழங்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். வரும் திங்கட்கிழமை முதல் அந்தந்த நியாய விலைக்கடைகளில் ஏற்கெனவே முதலமைச்சர் அறிவித்த சிறப்பு பரிசு தொகுப்போடு 1000 ரூபாயையும் சேர்த்து பொது மக்கள் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.