நீதித்துறை நெருக்கடி நிலையை பிரகடனம் செய்ய வேண்டியிருக்கும் – சிலை கடத்தல் வழக்குகளை கையாளும் தமிழக அரசின் போக்கு குறித்து நீதிபதிகள் அதிருப்தி.
சிலைகடத்தல் வழக்குகளில் மாநில அரசின் போக்கு குறித்து உயர்நீதிமன்றம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. நீதித்துறை நெருக்கடியில் இருப்பதாக அறிவிக்க நேரிடும் என உயர் நீதிமன்றம் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிலைக் கடத்தல் வழக்குகளில் மாநில அரசின் போக்கு குறித்து உயர் நீதிமன்றம் கடும் அதிருப்தியைப் பதிவு செய்தது.
உயர் நீதிமன்றத்தால், சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரிப்பதற்காக நியமிக்கப் பட்ட தனக்கு, அரசு எந்த உதவியும் வழங்கவில்லை என பொன் மாணிக்கவேல் நீதிமன்றத்தில் புகார் தெரிவித்தார்.
ஆனால், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவில் பணியாற்றியவர்களை தங்கள் பிரிவுக்கு திரும்ப பொன் மாணிக்கவேல் அறிவுறுத்தினார் என்று அரசு தரப்பு நீதிமன்றத்தில் கூறியது. மேலும், பணி ஓய்வு பெற்றவருக்கு இந்த அதிகாரம் இல்லை என அரசுத் தரப்பு வாதிட்டது.
இதற்கு, ஓய்வு பெற்ற டிஜிபிக்கு உத்தரவு பிறப்பிக்க அதிகாரம் உள்ளதா என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
தமிழக அரசு, அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் அறநிலையத்துறை, மற்றும் காவல்துறை ஆகியவை மூலம், சிலைக் கடத்தல் வழக்குகளை நீர்த்துப் போகச் செய்வதற்காக, உயர் நீதிமன்ற நீதிபதி மகாதேவன் மீதும், சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரித்து வரும் பொன் மாணிக்கவேல் மீதும், இவை எல்லாம் அவதூறுகளைப் பரப்பி வருவதாகக் கூறப் படுகிறது.