புது தில்லி: ஊழல் கறை சிறிதும் படியாமல் ஆட்சியை ஐந்து ஆண்டுகளுக்கும் நிறைவு செய்வது என்பதில் குறியாக இருக்கும் பிரதமர் மோடி, பரஸ்பரம் ஊழல் குற்றச்சாட்டைக் கூறி மோதலில் ஈடுபட்ட சிபிஐ., இயக்குனர் அலோக் வர்மாவை அதிரடியாக நீக்கினார். அவர் நீதிமன்றம் சென்று தனது நீக்கத்துக்கு தடை பெற்றபோதும், மோடி அலோக் வர்மாவை நீக்கி, வேறு பொறுப்புக்கு மாற்றிவிட்டார். பிரதமர் மோடி தலைமையிலான உயர்மட்ட தேர்வுக்குழு இந்த நடவடிக்கையை இன்று எடுத்துள்ளது.
சி.பி.ஐ., இயக்குனர் அலோக் குமார் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து, இருவரும், பரஸ்பரம் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறினர். இதையடுத்து, மத்திய அரசு, இருவரது அதிகாரங்களையும் பறித்து, கட்டாய விடுப்பில் அனுப்பியது.
தன்னை கட்டாய விடுப்பில் அனுப்பியதை எதிர்த்து அலோக் வர்மா தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு செல்லாது என தீர்ப்பளித்தது. அத்துடன் சி.பி.ஐ., தலைவராக அலோக் வர்மா தொடரலாம் என தெரிவித்திருந்தது. இதனையடுத்து 77 நாட்களுக்கு பிறகு சி.பி.ஐ., தலைவராக அவர் நேற்று (ஜன.,9) பொறுப்பேற்றார்.
இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் நீதிபதி சிக்ரி அடங்கிய நியமன குழு ஆலோசனை நடத்தியது. ஆலோசனையின் முடிவில் அலோக் வர்மாவை சி.பி.ஐ., இயக்குனர் பொறுப்பிலிருந்து நீக்க முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் இடமாற்றம் செய்யப்பட உள்ளார். வரும் ஜன.,31ஆம் தேதியுடன் அலோக் வர்மா பணி ஓய்வு பெறும் நிலையில் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதை அடுத்து அலோக் வர்மாவு சிபிஐ இயக்குநர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு, தீயணைப்புத் துறை இயக்குநராக நியமிக்கப் பட்டிருப்பதாக மத்திய அரசு அறிவித்தது.