புதுதில்லி : உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ இயக்குனராக ஜன-9 அன்று பதவியேற்ற அலோக் வர்மாவை, பிரதமர் மோடி தலைமையிலான
உயர்மட்ட தேர்வுக் குழு நேற்று மீண்டும் பதவியிலிருந்து நீக்கியது.
உயர்மட்ட தேர்வுக் குழுவில் இடம்பெற்ற பிரதமர் மோடியும், நீதிபதி ஏ.கே.சிக்ரியும் அலோக் வர்மாவை மீண்டும் சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து
நீக்க தீர்மானித்தனர். ஆனால் இக்குழுவில் இருடம்பெற்றிருந்த மற்றொரு உறுப்பினராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மல்லிகார்ஜூன கார்கே அதற்கு
எதிர்ப்பு தெரிவித்தார்.
மத்திய புலனாய்வு ஆணையம் (சிவிசி)., அளித்த அறிக்கையின் அடிப்படையிலேயே அலோக் வர்மா இப்போது பதவி நீக்கப்பட்டுள்ளதாகக்
கூறப்பட்டுள்ளது. அலோக் வர்மாவுக்கு எதிராக வலுவாக இருந்த 10 புகார்கள், அவரது பதவி நீக்கப்படக் காரணமாக அமைந்தது. இவற்றில் 3
புகார்களுக்கு ஆதாரம் உள்ளது. 6 புகார்களுக்கு ஆதாரம் இல்லை. ஒரு புகாருக்கான ஆதாரத்தின் நம்பகத்தன்மை பல்வேறு மாறுபாடுகளை
கொண்டதாக உள்ளது.
அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டுக்களில் முக்கியமானது, சிபிஐ விசாரணை வளையத்தில் இருந்த தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து ரூ.2 கோடி
லஞ்சம் பெற்றார் என்பதுதான். இதே போன்று ஐஆர்சிடிசி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் மீது எப்ஐஆர் பதிவு செய்யாமலும், ஒழுங்கு நடவடிக்கை
போன்ற நடவடிக்கைகளில் தப்பிக்கும் வகையில் விலக்கு அளித்தது, தில்லி விமான நிலையத்தில் தங்கம் கடத்தல் வழக்கில் நடவடிக்கை எடுக்க
தவறியது ஆகியவையே அலோக் வர்மாவுக்கு எதிராக மத்திய தேர்வுக்குழு முடிவு எடுக்க முக்கிய காரணங்கள் என்று கூறப் படுகிறது.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் மீது விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம். சில வழக்குகளில் கிரிமினல் விசாரணை உள்ளிட்டவைகளும்
நடத்தப்பட வேண்டி உள்ளது. இதனால் சிபிஐ தலைவர் பதவியில் அலோக் வர்மா தொடர்ந்தால் இந்த விசாரணை நடப்பது சாத்தியமற்றது என்ற
காரணத்தினாலேயே அவரது பதவி பறிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தவறு நேராமல் தடுக்கப்படவே சிபிஐ என்ற அமைப்பு உள்ளது. அந்த அமைப்பின் இயக்குனரே தவறுகளைச் செய்து கொண்டிருப்பது வேலியே பயிரை
மேய்வது போன்றதுதான்! இந்தக் காரணத்தாலேயே ஊழல் ஒழிப்பில் கவனத்தைச் செலுத்தி வரும் பிரதமர் மோடி, தனது இயல்புக்கு ஏற்ப, அவரது
பதவியைப் பறித்திருக்கிறார்.
அதே நேரம், தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் முகாந்திரம் அற்றவை என்கிறார் அலோக் வர்மா.
சிபிஐயின் தனித்துவத்திற்கு களங்கம் ஏற்படாத வகையில் நடந்து கொண்டேன்
என்றும், சிபிஐ நடவடிக்கைகளில் யாருடைய தலையீடும் இருக்கக் கூடாது என்றும் கூறியுள்ளார் அலோக் வர்மா.