Home உரத்த சிந்தனை திருச்சியில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகளின் மாநாடு! வைகோ, ஸ்டாலின், திருநாவுக்கரசர், சீதாராம் யெச்சூரி பங்கேற்பு!

திருச்சியில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகளின் மாநாடு! வைகோ, ஸ்டாலின், திருநாவுக்கரசர், சீதாராம் யெச்சூரி பங்கேற்பு!

திருச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தேசம் காப்போம் மாநாடு தொடங்கி இன்று மாலை நடைபெற்றது. இந்த மாநாட்டில் தோழமைக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக., பொதுச் செயலர் வைகோ, கம்யூனிஸ்ட் சார்பில் சீதாராம் யெச்சூரி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சியில் நடைற்ற தேசம் காப்போம் மாநாட்டில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் சேர்க்க வேண்டும்; மகளிர் இடஒதுக்கீடு சட்டம் இயற்ற வேண்டும். அந்தரங்கம் என்னும் அடிப்படை உரிமையைப் பறிக்கும் ஆணையைத் திரும்பப்பெற வேண்டும். விகிதாச்சார முறையைக் கொண்டுவர வேண்டும்; ஆணவக் கொலைகள் தடுப்புச்சட்டம் இயற்ற வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

மேலும், சபரிமலை தீர்ப்பை ஆதரிப்போம் எனவும் தேசம் காப்போம் மாநாட்டில் விசிக தீர்மானம் நிறைவேற்றியது.

தமிழகத்தின் அம்பேத்கர் திருமாவளவன்; திருமாவளவன் ஒரு குறிப்பிட்ட சாதிக்கோ மதத்திற்கோ எதிரானவர் அல்ல என்று இந்த மாநாட்டில் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் பேசினார்.

மத்தியில் மதச்சார்பற்ற அரசு அமைய மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி பாடுபடும் என்றும், வாஜ்பாய்க்கு மாற்று உருவானதுபோல் மோடிக்கு மாற்று நிச்சயம் உருவாவார்கள்- என்றும் சீதாராம் யெச்சூரி பேசினார்.

அணை பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தினால் அனைத்தையும் தகர்ப்போம். நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் மலரப்போகின்ற அரசு மாநில சுயாட்சியை உறுதி செய்யும் அரசாக அமையும்… தமிழ் நாட்டை பாலைவனமாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டால், அந்தந்த மாநிலங்களில் இருக்கும் மத்திய அரசு நிறுவனங்களை, மாநில அரசுக்கு சொந்தமாக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று எச்சரித்தார் வைகோ. மேலும், பிரதமர் மோடியும், அவரது சகாக்களும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்று முழக்கமிட்டார் வைகோ.

அந்நிய நாட்டில் இருந்து ஆபத்து வந்தால் மட்டுமே தேசம் காப்போம் என்ற முழக்கம் எழ வேண்டும் ஆனால் தேசத்தை யார் ஆட்சி செய்கிறார்களோ அவர்களால் ஆபத்து வந்துள்ளதால் தேசம் காப்போம் மாநாடு நடைபெறுகிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

மேலும், ரஃபேல் ஒப்பந்த பேரத்தில் முறைகேடு நடைபெறவில்லை என ஆதாரத்துடன் பாஜக அரசு நிரூபிக்க வேண்டும். பொருளாதார ரீதியாக இடஒதுக்கீடு வழங்குவதை நாங்கள் தவறு என கூறவில்லை. பொருளாதார ரீதியான இடஒதுக்கீடு சமூக நீதியை சீர்குலைக்கும் என்று விளக்கம் கொடுத்தார் மு.க.ஸ்டாலின்.

பாஜகவை எதிர்ப்பவர்கள் தேசத் துரோகி என்றால் அந்தப் பட்டத்தை மரியாதையுடன் ஏற்றுக் கொள்கிறோம் என்று வீர முழக்கம் இட்டார் ‘தேசத் துரோகி’ மு.க.ஸ்டாலின்.!

1 COMMENT

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version