மதுரைக்கு வரும் 27ம் தேதி வருகை தரும் பிரதமர் மோடிக்கு கறுப்புக் கொடி காட்டுவேன் என்று மே17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி கூறினார். இது பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஏற்கெனவே சென்னை திருவிடவெந்தையில் நடைபெற்ற இராணுவ கண்காட்சிக்கு சென்னை வந்திருந்த பிரதமர் மோடிக்கு திமுக., மதிமுக., உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கறுப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர். வைகோ வரம்பு மீறி நாக்கில் நரம்பு இல்லாமல் பேசினார். மோடியை ஒருமையில் விளித்தார். பிரதமர் என்ற மரியாதை இல்லாமல் பேசினார்.
இதனைக் கண்டு ஏன் தமிழகத்தில் அரசியல்வாதிகளும் அரசியல் கட்சிகளும் இப்படி இருக்கின்றன என்று மோடி தமிழக பாஜக.,வினரிடம் நொந்துபோய்க் கேட்டதாகக் கூறுகிறார்கள் தமிழக பாஜக., தலைவர்கள்!
இதன் பின்னர் கஜா புயல் நாகை, திருவாருர் உள்ளிட்ட பகுதிகளை தாக்கியது. அப்போது ஏன் பிரதமர் மோடி உடனே ஓடி வந்து பார்க்கவில்லை என்று திமுக.,வும் அதன் கூட்டணி, தோழமைக் கட்சிகளும் கேள்வி எழுப்பியதுடன், மோடி குறித்த அவதூறுப் பிரசாரத்தையும் மேற்கொண்டன.
தமிழகத்துக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கிலேயே ராணுவத் தளவாட கண்காட்சி, தொடர்ந்து தொழில் துறையில் பல திட்டங்கள் என்று மத்திய அரசு தமிழகத்துக்கு செய்து கொண்டிருக்க, தமிழகத்தின் வளர்ச்சியை விரும்பாத கம்யூனிஸ்ட்கள், மே 17 இயக்கம், சீமான், திமுக., உள்ளிட்ட கிறிஸ்துவ இஸ்லாமிய வெளிநாட்டு சக்திகளின் பின்னணியில் இயங்கும் நபர்கள் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் எல்லாம் செய்து வந்தார்கள்.
2015ல் சென்னையில் வெள்ளச் சேதம் ஏற்பட்ட போது, மறு நாளே சென்னைக்கு வந்து ஹெலிகாப்டரில் வெள்ள சேதத்தைப் பார்வையிட்டு, ஜெயலலிதாவுடன் ஊடகங்களைச் சந்தித்து உடனடி நிவாரணத்தை அறிவித்துச் சென்றார் மோடி. அப்போது எவரும் கைதூக்கவோ, வாய் திறக்கவோ இல்லை. காரணம், ஜெயலலிதா என்ற ஆளுமை!
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், தமிழகத்தை ஆளும் தரப்பு, வலிவற்ற தெளிவற்ற, கிடைத்த நாட்களில் கிடைத்த அளவு போதும் என்ற நோக்கில் பதவிகளில் ஒட்டிக் கொண்டிருப்பதாலேயே சீமான் போன்றவர்கள் எடப்பாடியை அது இது என்று ஒருமையிலும் அஃறிணையிலும் பேசி, எடப்பாடிக்கெல்லாமாடா பயப்புடறது… என்று கெக்கே பிக்கே என்று மேடையிலேயே சிரிக்கிறார். அவரைப் பார்த்து விசிலடிச்சான் குஞ்சுகளும் கைதட்டி ஆரவாரம் செய்து சிரிக்கின்றனர்.
முதுகெலும்புள்ள முதல்வராக இருந்திருந்தால், இந்நேரம் சீமான் தப்பித்தோம் பிழைத்தோம் என்று மண்டபத்தின் பின்வாசல் வழியாக ஜெயலலிதா இருந்த நேரத்தில் பின்னங்கால் பிடறிமயிர் தெறிக்க ஓடியது போல் ஓடி ஒளிந்திருப்பார். ஆனால், சீமான் கூற்றான எடப்பாடிக்கெல்லாமாடா பயப்படுவது என்பதை உண்மையாக்கிக் கொண்டிருக்கும் முதல்வர் இருக்கின்ற காரணத்தால் தான், திருமுருகன் காந்தி போன்றவர்கள், பிரதமருக்கு கருப்புக் கொடி காட்டுவேன் என்று கொக்கரிக்கின்றார்.
இந்த நிலையில்தான்… மதுரையின் அஞ்சாநெஞ்சன் என்று பெயரெடுத்த அழகிரியின் பெயரில் ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் உலா வந்தது. இன்னமும் ஆக்டிவ் அதிரடி அரசியலில் நான் இருக்கிறேன் என்று அழகிரி காட்டுவதுபோல், மதுரை வரும் மோடிக்கு கறுப்புக் கொடி காட்டினால், திருமுருகன் காந்தி அடித்து விரட்டப் படுவார் என்று அழகிரி சொன்னதாக ஒரு தகவல் உலாவந்தது.
இது சமூகத் தளங்களிலும் வைரலாகப் பரவியது. இந்நிலையில் இது குறித்து நம் மதுரை செய்தியாளர்கள் மு.க.அழகிரியிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, இது குறித்து கருத்து சொல்ல மறுத்துவிட்டார். பின்னர் இது வதந்தி, நான் அவ்வாறு எதுவும் சொல்லவில்லை என்றாராம்.
இன்னமும் மு.க.அழகிரியை வலிமையுள்ளவராக, அஞ்சா நெஞ்சராக நம்பிக் கொண்டிருக்கும் யாரோ சிலர் பரப்பி விட்ட செய்தியாக இது இருக்க, தாம் அஞ்சும் நெஞ்சர்தான் என்று தெளிவிக்கும் விதமாக இது ஒரு வதந்தி என்று கூறியுள்ளார் அழகிரி!
மதுரை வலிமையான தலைவர்களைக் கண்டிருக்கிறது. திமுக., தலைவரான அண்ணாவையே தவறான வார்த்தைகளை பயன்படுத்தியதற்காக பசும்பொன் தேவர் மிரட்டல் விடுக்க, அண்ணா ஓடி ஒளிந்த சம்பவமும் நடந்திருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது!