காங்கிரஸ் கட்சி, பிரியங்கா வத்ராவை உ.பி. மாநில கிழக்கு மண்டல பொதுச் செயலராக நியமித்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் இந்த திடீர் முடிவு சிலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், பாஜக.,வினருக்கு ஆச்சரியத்தை தரவில்லை. காரணம், குடும்பமே கட்சி, கட்சியே குடும்பம் என்று காங்கிரசுக்கு எதிராக பிரசாரம் செய்ய இது ஒரு சாக்கு ஆகி விட்டது என்கின்றனர்.
இந்நிலையில், பிரியங்கா வத்ரா நியமனம் குறித்து கருத்து தெரிவித்த பீகார் மாநில துணை முதல்வரும் பாஜக., தலைவருமான சுஷில் குமார் மோடி, குற்றம் செய்த ஒருவரின் மனைவியாகவே பிரியங்கா பார்க்கப்படுவார் என்று விமர்சனம் செய்துள்ளார்.
மேலும், உத்தர பிரதேசத்தில் கூட்டணி அமைத்துள்ள மாயாவதியின் பகுஜன் சமாஜ், அகிலேஷின் சமாஜ்வாதி கட்சிகளை மிரட்டும் வகையிலேயே, பிரியங்காவுக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
நில அபகரிப்பு முறைகேடு புகாரில் சிக்கியுள்ளார் ராபர்ட் வத்ரா. பிரியங்கா, இந்திரா காந்தியின் பேத்தி என்பதை விட முறைகேடுகளில் சிக்கி புகார்களுக்கு உள்ளாகியுள்ள ராபர்ட் வத்ராவின் மனைவியாகவே மக்களால் பார்க்கப்படுவார் என அவர் விமர்சனம் செய்துள்ளார்.