சென்னை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ – ஜியோ அமைப்பை சேர்ந்த 422 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளர்.
ஜாக்டோ ஜியோ அமைப்பின் மூலம் ஆசிரியர்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், நீதிமன்றம், ஜன.25க்குள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று உத்தரவிட்டது.
ஆனால் ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்கள் மீது நடவடிக்கைகளை எடுத்து வருகிறது தமிழக அரசு. நேற்று நள்ளிரவு வரை போராட்டத்தில் ஈடுபட்டு தலைமை தாங்கிய சிலரைக் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. இந்நிலையில், இன்றும் தமிழக முதல்வர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கேட்டுக் கொண்டும், தங்கள் கோரிக்கைகள் நிறைவேறாத வரை பணிக்கு திரும்பப் போவதில்லை என்று ஆசிரியர்கள் கூறிவிட்டதால், வேறு வழியின்றி, சென்னை உயர் நீதிமன்றம் கூறிய படி நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது தமிழக அரசு.
இதை அடுத்து, பல்வேறு மாவட்டங்களில் ஜாக்டோ ஜியோவை சேர்ந்த ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அவர்களுக்கு அந்த உத்தரவை பள்ளிக்கல்வித்துறை வழங்கியது.