கேரள மாநிலம் திரிசூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, நாட்டின் சொத்துக்களை யாரையும் கொள்ளை அடிக்க விடமாட்டேன் என்று கூறினார்.
பிரதமர் மோடி இன்று முற்பகல், தமிழகத்துக்கு வந்தார். மதுரையில் நடைபெற்ற இரு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பேசினார். மிகக் குறுகிய நேரமே திட்டமிடப்பட்ட இரு நிகழ்ச்சிகளில் ஒன்று எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டும் அரசு சார் நிகழ்ச்சி. தொடர்ந்து பாஜக.,வின் பொதுக்கூட்டத்தில் குறைந்த நேரமே இருந்து பேசினார்.
பின்னர் அங்கிருந்து கேரள மாநிலம் கொச்சிக்குச் சென்றார். அங்கே, பெட்ரோ நிறுவன நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு, அங்கிருந்து திரிசூருக்குச் சென்றார். திருசூரில் அரசு சார் நிகழ்ச்சி மற்றும் பாஜக.,வின் பொதுக் கூட்டம் இவற்றில் பங்கேற்றார்.
திரிசூர் கூட்டம் மிகப் பிரமாண்டமாகக் கூட்டப் பட்டிருந்தது. பாஜக., தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டிருந்தனர். இந்தக் கூட்டத்தில் பேசிய மோடி, வளர்ச்சியே நம் நோக்கம். ஆனால் எதிர்கட்சியினரோ, மோடி மோடி என தனிப்பட்ட வகையில் என் மீதே குற்றம்சாட்டி அவதூறு பரப்பி வருகின்றனர்.
எனக்கு அவமரியாதை செய்யுங்கள், ஆனால்,விவசாயிகளையும், இளைஞர்களையும் அவமானப்படுத்தாதீர்கள். என்னை எதிர்க்கவே எதிர்க் கட்சியினர் ஒன்று கூடியுள்ளனர். அவர்களுக்கு வேறு எந்த நல்ல நோக்கமும் இல்லை.
நாட்டின் நல்ல விஞ்ஞானியான நம்பி நாராயணன் மீது கிரிமினல் குற்றம் சாட்டினார்கள் காங்கிரஸார். ஆனால் நாங்கள் அவருக்கு விருது கொடுத்து கௌரவித்துள்ளோம்!
கேரள அரசு கலாசாரம் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. உணர்வுபூர்வமான நம்பிக்கை விஷயத்தில் கேரள அரசு அவமரியாதை செய்கிறது. அவர்களுக்கு பெண்கள் குறித்து எந்தக் கவலையும் இல்லை; பெண்கள் சமத்துவம் குறித்த கருத்தெல்லாம் இல்லை. சபரிமலை விவகாரம் நாட்டின் கவனத்தை ஈர்த்துள்ளது. காங்கிரசும், இடதுசாரிகளும் ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படுகின்றன. இவை, ஜனநாயகம் குறித்துப் பேசுவது நகைப்புக்கு உரியது.
நாட்டின் கலாசாரத்தைக் காப்பாற்ற வேண்டும் என்றே நான் உழைக்கிறேன். நாட்டு சொத்துக்களை யாரையும் கொள்ளை அடிக்க அனுமதிக்க மாட்டேன். ஊழல் செய்பவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்… என்று சூளுரைத்தார் மோடி.