மெகா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் வாரத்தில் ஒவ்வொரு நாளும் ஒருவர் பிரதமராக இருப்பார், சனிக்கிழமை ஸ்டாலின் பிரதமராக இருப்பார் என பாஜக., தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
பாஜக. தேசிய தலைவர் அமித்ஷா உத்தரப் பிரதேசம் மாநிலம், கான்பூர் நகரில் நடைபெறும் கூட்டத்தில் பேசினார். அப்போது அவர், மோடி ஆட்சியை வீழ்த்துவதற்காக கைகோத்துள்ள எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள மெகா கூட்டணியை கேலி செய்யும் விதமாக மத்தியில் எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைத்தால் வாரத்தின் 6 நாட்களில் 6 பேர் பிரதமர் பதவியை வகிப்பார்கள் என குறிப்பிட்டார்.
‘திங்கட்கிழமை மாயாவதி பிரதமராக இருப்பார்,
செவ்வாய்க்கிழமை அகிலேஷ் யாதவ்,
புதன்கிழமை மம்தா பானர்ஜி,
வியாழக்கிழமை சரத்பவார்,
வெள்ளிக்கிழமை தேவேகவுடா,
சனிக்கிழமை ஸ்டாலின் ஆகியோர் பிரதமர்களாக இருப்பார்கள்.
ஞாயிற்றுக்கிழமை ஒட்டுமொத்த நாட்டுக்கும் விடுமுறை நாளாக அமைந்துவிடும்’ என பலத்த கரகோஷம் மற்றும் சிரிப்பலைகளுக்கு இடையில் அமித் ஷா பேசினார்.
உ.பி.,யின் லக்னோ மற்றும் கான்பூரில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் அமித்ஷா உரையாற்றினார். அப்போது உ.பி.,யில் 74 இடங்களுக்கும் அதிகமான இடங்களை கைப்பற்ற பாஜக., தொண்டர்கள் உறுதி ஏற்க வேண்டும். சமாஜ்வாதி – பகுஜன் சமாஜ் கட்சியின் ஊழல் கூட்டணியை பாஜக., தொண்டர்கள் முறியடிக்க வேண்டும். அகிலேஷ் – மாயாவதி ஜாதி அரசியலை மட்டும் செய்கிறார்கள். குற்றம், ஊழல், ஜாதி இவை மட்டுமே ஒன்று சேர்ந்து கூட்டணி வைத்துள்ளன. பாஜக., அரசு அனைவருக்காகவும் செயலாற்றுகிறது. ஒரு குறிப்பிட்ட ஜாதிக்காக மட்டுமல்ல. ஜாதி அடிப்படையிலான அரசியலுக்கு பாஜக., முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
மோடி போன்ற ஒருவரால் மட்டுமே எவ்வித சமரசமும் செய்து கொள்ளாமல் நாட்டை வழிநடத்த முடியும். அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பாஜக., உறுதி பூண்டுள்ளது. கோயிலை அரசியல் பிரச்னையாக்க பாஜக., விரும்பவில்லை என்று கூறினார்.