கோவா: அண்மையில் விடுமுறையைக் கழிக்க கோவா சென்றிருந்த ராகுல், உடல்நலமில்லாமல் இருக்கும் மாநில பாஜக., முதல்வர் மனோகர் பாரீக்கரை சந்தித்தார். அப்போது சாதாரண உடல் நலம் விசாரிப்புதான் என்று கூறப்பட்டாலும், பின்னாளில் தன் அரசியல் சுயலாபத்துக்கு அதை பயன்படுத்திக் கொண்டு, முன்னுக்குப் பின் முரணாக பொய் பேசிக் கொண்டிருக்கிறார் ராகுல்!
ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாகவும் அதில் பாரீக்கருக்கு தொடர் உள்ளதாகவும் கூறி வருகிறார் ராகுல்! யாரும் அவரின் குற்றச்சாட்டை கண்டுகொள்ளவில்லை! ராகுலுக்குத்தான் பேர் ரிப்பேர் ஆனது. இந்நிலையில் பாரீக்கரை ராகுல் கோவாவில் சந்தித்தார். சட்டீஸ்கரில் நடந்த பேரணியில் கலந்துகொண்டு பின் கோவா திரும்பிய ராகுல், பின்னர் பாரீக்கரை சந்தித்துள்ளார். அதுவும் சட்டசபையில் வைத்து! அவருடன் மாநில காங்கிரஸ் தலைவர்களும் உடன் சென்றுள்ளனர். பிறகு இருவரும் தனியாக ஓரிரு நிமிடங்கள் அறையில் சந்தித்துள்ளனர்.
இது குறித்து ராகுல் செய்த டிவிட்டர் பதிவில், ‛‛இது தனிப்பட்ட சந்திப்பு! அவரது உடல்நிலை குறித்து விசாரிக்கச் சென்றேன்” என்று குறிப்பிட்டார். ஆனால் பின்னர் கொச்சி பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல், ‛‛ரபேல் ஒப்பந்தத்தில் எனது பங்கு எதுவும் இல்லை” என்று பாரீக்கர் என்னிடம் கூறினார் என்று ஒரு பொய் மூட்டையை அவிழ்த்து விட்டார். அதாவது பாரீக்கரிடம் ரபேல் குறித்து எதுவும் பேசவில்லை என்று சொன்னவர், பின்னர் ஆமாம் ரபேல் பற்றி பேசினேன் என்றார்.
இவரது முரண்பட்ட பேச்சு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது பாரிக்கருக்கு! சொல்லப்போனால், ரபேல் விவகாரத்தை வைத்து பிரதமர் மோடிக்கும் பாரீக்கருக்கும் இடையே பிளவை ஏற்படுத்த ராகுல் மேற்கொண்ட முயற்சி இது. ரபேல் ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறிய பின்னரும், பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆக்ரோஷமாக நாடாளுமன்றத்தில் பேசிய பின்னரும், காங்கிரஸ் பேச எதுவும் இல்லைதான். ஆனாலும் ராகுல் விட மறுக்கிறார்.
தன்னிடம்தான் ரபேல் ஆவணங்கள் இருப்பதாக பாரீ்க்கர் கூறினார் என திரும்ப திரும்பக் கூறி வருகிறார் ராகுல். மேலும், ரபேல் குறித்த ஆடியோ தன்னிடம் இருப்பதாகவும் கூறினார். ஆனால் இப்படி ஒரு ஆடியோ இருக்கிறது என்பதே பொய். ஆடியோ உண்மைத் தன்மைக்கு ராகுல் உத்தரவாதம் கொடுப்பாரா என அருண் ஜெட்லி கேட்டார். இந்த ஆடியோவுக்கு உத்தரவாதம் தருமாறு ராகுலிடம் அவைத்தலைவர் சுமித்ரா மகாஜன் கேட்டார். ஆனால் ராகுல் அதற்கு மறுத்து விட்டார். ஆடியோ என்பதே ராகுலின் கடைசி முயற்சிதான் என்றார் பாரீக்கர்.
இரு நாட்களுக்கு முன் டிவிட்டர் பதிவில், ‛‛ஆடியோ விஷயம் வெளியாகி 30 நாட்கள் ஆகி விட்டன. எப்.ஐ.ஆர் பதிவு எதுவும் இல்லை. விசாரணை நடக்கவில்லை” என்று குறிப்பிட்டார்.
இந்நிலையில் ராகுலுக்கு, பாரீக்கர் கடிதம் எழுதி உள்ளார். அந்தக் கடிதத்தில், பாரீக்கர் கூறியுள்ளதாவது:
என்னை சந்திக்க வந்தது அரசியல் ஆதாயத்திற்காக என்பதை நினைக்கும் போது வருத்தம் அளிக்கிறது. 5 நிமிடம் நடந்த சந்திப்பில், ரபேல் குறித்து நீங்கள் எதையும் குறிப்பிடவில்லை. அது குறித்து விவாதிக்கவில்லை. மக்களுக்கு சேவை செய்வதற்காக, வாழ்த்து தெரிவிக்கவே நீங்கள் என்னை சந்திப்பதாக நினைத்தேன். வேறு உள்நோக்கம் இருப்பது பின்னர் தான் தெரியவந்தது. பெரிய ஏமாற்றத்துடன், உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்பதற்காக இந்தக் கடிதத்தை எழுதி உள்ளேன். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட நபர்களை சந்திப்பதை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்த வேண்டாம் என உங்களைக் கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
பாரிக்கரின் இந்தக் கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கூடவே, ராகுலுக்கு அவப்பெயரையும் மூக்குடைப்பையும் தந்திருக்கிறது.