மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தை முக்கியமாகக் கருதுகிறார் என்பதால், தமிழகத்தில் அவரது சுற்றுப் பயணங்கள் அதிகமாக திட்டமிடப் பட்டுள்ளது.
எந்த அளவுக்கு எதிர்ப்புகளை அரசியல் கட்சிகள் கொடுக்கின்றனவோ அதற்கு ஏற்ப அதிக முறை தமிழகத்துக்கு வந்து பொதுமக்களிடம் அரசின் திட்டங்களைக் கொண்டு சேர்க்க திட்டமிட்டுள்ளார் மோடி. அதற்காக, மீண்டும் அவரது தமிழக வருகை திட்டமிடப்பட்டுள்ளது!
சென்னை மெட்ரோ வண்ணாரப்பேடை வழித்தடத்தை பிப்ரவரி 10 அல்லது 19ஆம் தேதி அவர் திறந்து வைக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே பிப்ரவரி 10ஆம் தேதி மோடி திருப்பூர் வருகிறார். அங்கே பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்காக பிரசாரத் திடல் தயாராகி வருகிறது. தொடர்ந்து கன்னியாகுமரியில் அவர் பிப்ரவரி 19 ஆம் தேதி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது.
சென்னை வண்ணாரப்பேட்டை மெட்ரோ வழித்தடத்தை தொடங்கி வைக்க மோடி நேரடியாக சென்னை வரலாம் அல்லது வீடியோ மூலம் திறந்து வைக்கலாம் என்று செய்தி வெளியாகியுள்ளது!
இதனிடையே, கன்னியாகுமரியை காங்கிரஸ் தலைவர் ராகுல் குறிவைத்துள்ளதாகக் கூறப் படுகிறது. ராகுல் வடக்கே ஒரு தொகுதியிலும், தெற்கே ஒரு தொகுதியிலும் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக காங்கிரஸாரும் கூறி வருகின்றனர்.
அதிமுக., தலைமையில் தமிழகத்தில் கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகள் பின்னணியில் நடந்து கொண்டிருப்பதாகக் கூறப் படுகிறது. தேமுதிக., பாமக., புதிய தமிழகம் என பேச்சு வார்த்தைகள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. அதிமுக 23 பாஜக மற்றும் பிற கட்சிகள் சேர்ந்து 17 தொகுதிகள் என்று கூட்டணி அமையக்கூடும் என்று கூறப் படுகிறது.
பாஜக., அதிமுக., கூட்டணிக்கு தம்பிதுரை, அன்வர்ராஜா இருவரும் எதிர்ப்பு தெரிவித்து பேசி வருகின்றனர். ஆனால், நேற்று நாடாளுமன்ற மையமண்டபத்தில் குடியரசுத்தலைவர் உரையின் போது, தம்பிதுரை வலியப் போய் பாஜக., தலைவர்களுடன் புன்னகை தவழ பேசிக் கொண்டிருந்தார். இருப்பினும், தம்பிதுரை, அன்வர்ராஜா இருவரும் காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமாகி, கரூர், ராமநாதபுரம் தொகுதிகளில் மீண்டும் போட்டியிடக் கூடும் என்று தகவல்கள் பரவி வருகின்றன.