வங்கிகளுக்கு வட்டியுடன் சேர்த்து, தான் ரூ. 9 ஆயிரம் கோடி தான் செலுத்த வேண்டும் எனும் நிலையில் 13 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தனது சொத்துக்களை பறிமுதல் செய்கிறார்களே… இது நியாயமா என்று கேள்வி எழுப்பியுள்ளார் விஜய் மல்லையா.
இந்தியாவில் வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு, அவற்றை வாராக் கடன்களாக்கி தப்பித்து வெளிநாட்டில் பதுங்கி இருக்கும் விஜய் மல்லையா, இது குறித்து தனது டிவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது…
நான் ஒவ்வொரு நாள் காலையிலும் எழும்போது புதிது புதிதாக எனது மற்றுமொரு சொத்தை பறிமுதல் செய்யக் காத்திருக்கும் கடன் மீட்புத் தீர்ப்பாய அலுவலரைச் சந்திக்க வேண்டியுள்ளது என்று நொந்து போய்க் கூறியுள்ளார்.
இந்தியாவில் உள்ள எனது சொத்துகளின் தற்போதைய மதிப்பு 13 ஆயிரம் கோடி ரூபாயைக் கடந்துள்ளது. இப்படித்தான் கடன் வசூல் அதிகாரி கூறி வருகிறார். ஆனால், இப்போதும் நான் இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளின் ரூ.9 ஆயிரம் கோடியை ஏமாற்றிவிட்டு நாட்டை விட்டு வெளியே வந்துவிட்டேன் என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள்.
நான் வட்டியுடன் 9 ஆயிரம் கோடி ரூபாய்தான் அளிக்க வேண்டும் என்றுதான் வங்கிகள் கூறுகின்றன. ஆனால் 13 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்களை கையகப்படுத்தியிருக்கிறார்கள். இது நியாயமா?
எனது சொத்துகளை கையகப் படுத்த இங்கே இங்கிலாந்தில் உள்ள அவற்றின் வங்கி வழக்கறிஞர்களுக்கு எனக்கு எதிராக வாதாட அதிக அளவில் பொதுமக்களின் பணத்தை வீணடித்து வருகிறார்கள் என்றெல்லாம் தனது டிவிட்டர் பதிவில் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்துள்ளார் விஜய் மல்லையா!