புது தில்லி: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி காப்பாற்றத் துடிக்கும் சாரதா சிட்பன்ட் முறைகேட்டில் தொடர்புடைய கோல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ்குமார் சிபிஐ., விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
‘சிட்பண்ட்’ மோசடி வழக்கு தொடர்பாக கோல்கத்தா காவல் ஆணையர் வீட்டுக்கு விசாரணை நடத்த சென்ற சி.பி.ஐ., அதிகாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டு மேற்கு வங்க போலீசாரால் கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டனர். மத்திய அரசை கண்டித்து மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி போராட்டம் நடத்தினார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தை அணுகியது சிபிஐ., அதில், உச்ச நீதிமன்ற உத்தரவு மற்றும் வழிகாட்டுதல் படியே இந்த விவகாரத்தில் செயல்படுவதாக சிபிஐ தெரிவித்திருந்தது. இதனால், சிபிஐ.,யின் மனுவை செவ்வாய்க்கிழமை இன்று விசாரிப்பதாகக் கூறிய உச்ச நீதிமன்றம், இன்று காலை விசாரித்தது. பின்னர், கோல்கத்தா காவல் ஆணையர் சிபிஐ., விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.