அதிமுக., தலைமையில்தான் கூட்டணி என்று முடிவாகி விட்டாலும், ஜெயலலிதா இருந்த சூழலைப் போல் இப்போது அதிமுக., கையாள முடியாது என்பது நன்றாகத் தெரிகிறது. காரணம், ஆர்.கே.நகரில் பணமழையில் தோல்வியைத் தழுவியதை அதிமுக.,வினர் இன்னமும் மறக்கவில்லை! ஜெயலலிதாவுக்குப் பின்னர் கட்சி நீர்த்துப் போகாமல், இன்னமும் ஆட்சியில் இருப்பதை அதிசயமாகவே பார்த்து வருகின்றனர் பலரும்!
ஒத்தைக்கு ஒத்தை என்று சொல்லுவது போல், ஜெயலலிதா வசதியாக கூட்டணிகளை கடந்த முறை பிரித்தார். ஒட்டுமொத்தமாக தமிழகத்தை வளைத்தார். பாஜக., கூட்டணியில் 2 தொகுதிகளும், திமுக.,வுக்கு எதுவுமே இல்லாமலும் கடந்த நாடாளுமன்றத் தொகுதி முடிவுகள் எடுத்துக் காட்டியிருந்தன. ஆனால், இன்று சூழல் மாறிப் போயுள்ளது.
அதிமுக., ஒற்றைத் தலைமையின் கீழ் இருக்கவில்லை! ஊர் ஊருக்கு தலைமை! இல்லாவிட்டால், தலைமை என்று ஒரு தரப்பு எடுக்கும் முடிவுகளை தம்பிதுரை, அன்வர்ராஜா போன்றவர்கள் விமர்சனம் செய்தோ, மறுத்தோ பேசியிருக்க முடியாது. ஜெயலலிதாவால் தான் தங்களுக்கு வெற்றி என்பதை இவர்கள் மறந்துவிடவும் இயலாது!
இந்நிலையில், அதிமுக.,வும் அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று விரும்புகிறது. காரணம் தற்போது எம்.பி.க்களாக இருப்பவர்கள் 37 பேர். இவர்கள் அனைவருமே மீண்டும் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளனர். மேலும், இவர்களில் சிலரின் வாரிசுகளும் இப்போது களத்தில் இறங்க ஒத்தையா ரெட்டையா போட்டு வருகின்றன.
ஐ.ஜே.கே., புதிய நீதிக் கட்சி, புதிய தமிழகம், ஜி.கே.வாசன் என தலா ஒரு தொகுதியாவது ஒதுக்கியாக வேண்டிய சூழல்.
இவர்களுக்கு பாஜக.,தான் தங்கள் தொகுதிகளில் விட்டுக் கொடுத்தாக வேண்டிய நிலை. மேலும் தேமுதிக., பாமக., கூட்டணியில் வந்தால் குறைந்தது தலா 3 முதல் 4 தொகுதிகள் ஒதுக்கியாக வேண்டும். எனவே 15 தொகுதிகளை பாஜக + கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்தால் ஏற்கெனவே உள்ள அதிமுக எம்பிக்கள் அதிருப்தி அடைவார்கள். தாங்கள் போட்டியிடும் தொகுதிகளும் குறைந்துவிடும். இத்தகைய சூழ்நிலையை முன்னே வைத்துக் கொண்டுதான் முதல் கட்ட பேச்சு வார்த்தையே தொடங்குகிறது அதிமுக., கூட்டணியில்!
தங்கள் தரப்பு வேட்பாளர்கள் பட்டியல் என பாஜக., அளித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இவை அனுமானங்கள் என்கிறார்கள் பாஜக.,வினர்.
திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன் அல்லது தேவநாதன்! திண்டுக்கல்லில் முன்னாள், எம்.பி., கார்வேந்தன். இருப்பதில் தென்சென்னைதான் சிக்கலில் இருப்பதாக அதிமுக.,வினர் கூறுகின்றனர். தென்சென்னை தொகுதி ஏற்கெனவே பாஜக., போட்டியிட்ட முக்கியத் தொகுதி. தமிழிசை உட்பட தமிழக, பாஜக.,வின் முக்கியத் தலைவர்கள் போட்டியிட விரும்பும் தொகுதி! இங்கே மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார் மகன் ஜெயவர்த்தன் தொகுதி என்பதால் சிக்கல்.
திருவள்ளூர் தொகுதியை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவராக உள்ள முருகனுக்காக பாஜக., கேட்பதாகவும், இது அதிமுக., நாடாளுமன்ற கட்சித் தலைவர் வேணுகோபாலின் தொகுதி என்பதால் சிக்கலில் இருப்பதாகவும் கூறப் படுகிறது.
தாங்கள் உறுதியாக நம்பும் கன்னியாகுமரி, திருப்பூர், கோவை ஆகியவற்றுடன், தஞ்சாவூர், கிருஷ்ணகிரி, மதுரை ஆகியவற்றையும் பாஜக., கேட்டு வருகிறது.
புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமிக்காக தென்காசி; இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தருக்காக பெரம்பலூர்; புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்துக்காக வேலூர் ஆகியவையும் கேட்கப் படுகின்றன.
இந்நிலையில், அதிமுக.,வில் முதற்கட்ட பேச்சு தொடங்கப் பட வுள்ளது. இன்று ஓபிஎஸ்., அதனை சூசகமாக அறிவித்துள்ளார். கூட்டணி இறுதி வடிவம் பெற்றாலும் தொகுதிப் பங்கீடுதான் பல நேரங்களில் இழுபறியை ஏற்படுத்திக் கொண்டிருக்கும். இது அதிமுக.,வில் மட்டுமல்ல, திமுக.,விலும் பெரும் பிரச்னையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.,