புது தில்லி : உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபடி, கோல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரிடம் சிபிஐ விசாரணை எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு, இந்த வார இறுதியில் விசாரணை நடத்தப் படும் என்று சிபிஐ வட்டாரங்கள் பதிலளித்துள்ளன.
சாரதா சிட்பண்ட் மோசடி தொடர்பாகவும், ஆதாரங்களை மறைத்தும் அழித்தும் செய்தது தொடர்பாகவும் கோல்கத்தா நகர காவல் ஆணையரை விசாரணை செய்வதற்காக சிபிஐ அதிகாரிகள் சென்றனர். அவர்களை முதல்வர் மம்தா பானர்ஜியின் உத்தரவின் பேரில், கோல்கத்தா போலீசார் சிறைபிடித்தனர்.
இது மிகப் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் மனு போடப் பட்டு, உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ அதிகாரிகள் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்தவுள்ளனர். மேற்கு வங்கத்தில் இருந்து வெளியே இருவருக்கும் பொதுவான இடத்தில் விசாரணை நடத்தலாம் என நீதிமன்றம் சொன்னதால், சிபிஐ அதிகாரிகள் சில்லாங்கில் இருந்து தில்லி திரும்பி உள்ளனர்.
தொடர்ந்து, வெள்ளிக்கிழமை நாளை முதல் ராஜீவ் குமாரிடம் விசாரணையைத் தொடங்க சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். மேலும், விசாரணைக்கு தயாராவதற்காக ராஜீவ் குமாருக்கு 2 நாள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
ராஜீவ் குமாரிடம் 80 முதல் 100 கேள்விகள் வரை கேட்க சிபிஐ திட்டமிட்டு கேள்விப் பட்டியலை தயாரித்துள்ளனர்.
மேலும், தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி பிப்.28க்குள் ராஜீவ் குமார் அந்தப் பதவியில் இருந்து மாற்றம் செய்யப்பட வேண்டும். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளதால் பிப்.15 முதல் 20ஆம் தேதிக்குள் அதிகாரிகள் இடமாற்றப்பட வேண்டும் என்று முதல்வர் மம்தா அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் ராஜீவ் குமாரிடம் துரிதமாக விசாரணையை முடிக்க வேண்டிய கட்டாயச் சூழலில் சிபிஐ இருக்கிறது.
முன்னதாக ராஜீவ் குமாரிடம் சி.பி.ஐ. விசாரிக்க மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்து 3 நாட்கள் தர்ணா போராட்டம் நடத்தினார்.
இதனால் சிபிஐ உச்ச நீதிமன்றத்தை நாடியது. விசாரணை முடிவில், ஷில்லாங் நகரில் சி.பி.ஐ. விசாரணைக்கு ராஜீவ் குமார் ஆஜராக வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி இந்த வார இறுதிக்குள் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக தயாராக இருப்பதாக சி.பி.ஐ.க்கு ராஜீவ் குமாரும் கடிதம் எழுதினார்.