மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற வேண்டும் என்று, திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளும் தூது விட்டுள்ளன என்கிரார் தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்!
திமுக கூட்டணி என்று காங்கிரஸ் கட்சி மட்டுமே இப்போது உள்ளது. மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், சிபிஐ, சிபிஎம் என மக்கள் நலக் கூட்டணியில் இருந்த கட்சிகள் தற்போது திமுக.வுடன் தோழமை பாராட்டும் கட்சிகளாக உள்ளன. இந்தக் கட்சிகள் திமுக.,வுடன் கூட்டணியில் இணையும் என்று நம்பப் படுகிறது. அதே நேரம், கட்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, தொகுதிப் பங்கீடு பெரும் பிரச்னையாக உருவெடுக்கும் என்பதால், அதிக அளவிலான கட்சிகளைச் சேர்க்க திமுக., விரும்பவில்லை. அப்படியே ஓரிரு தொகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக., உள்ளிட்டவை போட்டியிட்டாலும், திமுக.,வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடட்டும் என்று கட்சியினர் மத்தியில் பேச்சு பலமாக அடிபடுகிறது.
அதிமுக கூட்டணியில், பாஜக, தேமுதிக., பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம், சமத்துவ மக்கள் கட்சி, ஐஜேகே., கொமக., ஆகியவை இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக கூட்டணி குறித்து இன்னும் எந்த அதிகாரபூர்வ முடிவும் வெளிவரவில்லை.
இதனிடையே இன்று வழக்கம் போல் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், ‘திமுக கூட்டணி வலுவாக இருப்பதாகக் கூறப்பட்டு வருகிறது. உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா. அந்தக் கூட்டணியிலிருந்து எங்கள் கட்சி தலைமையிலான கூட்டணியில் இணைவதற்காக தூது விட்டு வருகின்றனர். எந்தக் கட்சி தூது விட்டது என்பது குறித்து இப்போது சொல்ல முடியாது. அது ரகசியம்’ என்று கூறினார்.
இது இப்போது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. எந்தக் கட்சியாக இருக்கும் என்று அனுமானங்களும் பரவலாகியுள்ளன.