எதிர்க்கட்சிகளின் பொய் இப்போது அம்பலமாகிவிட்டது என்று கூறியிருக்கிறார் அருண் ஜேட்லி!
ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் பாஜக ஊழல் செய்து விட்டதாக காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவர் ராகுலும் குற்றம்சாட்டி வரும் நிலையில், மற்ற எதிர்க்கட்சிகளும் ராகுலுடன் சேர்ந்து மோடியை வசைபாடக் கிடைத்த வாய்ப்பாக அதை பயன்படுத்தின. இந்நிலையில், இந்த விவகாரத்தில் அனில் அம்பானிக்கு ஆதரவாக பிரதமர் மோடி செயல்பட்டதாக ராகுல் பகிரங்கமாகக் கூறிவந்தார்.
மேலும், காங்கிரஸ் ஒப்பந்தம் செய்த விலையை விட, அதிக விலைக்கு பாஜக ஒப்பந்தம் செய்தது என்றும், காங்கிரஸ் வாங்க நினைத்த விமானங்களின் எண்ணிக்கையை விட குறைவான ரபேல் விமானங்களை வாங்கியுள்ளதாகவும் ராகுல் கூறி வந்தார். இந்தச் சூழலில் தான் சிஏஜி அறிக்கை மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப் பட்ட ரபேல் ஒப்பந்தம் தொடர்பான சிஏஜி அறிக்கையில், காங்கிரஸ் ஒப்பந்தம் செய்த தொகையை விட 2.8% குறைவான தொகையிலேயே ரபேல் விமானங்களை மோடி தலைமையிலான அரசு வாங்கியுள்ளதாகவும், இதனால் எதிர்க்கட்சிகளின் பொய் அம்பலமாகி இருப்பதாகவும் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், சத்யமேவ ஜயதே.. வாய்மையே வெல்லும்.
ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக நாட்டு மக்களிடம் தொடர்ச்சியாக பொய் கூறி வந்தவர்களை, ஜனநாயகம் எவ்வாறு தண்டிக்கப் போகிறது என கேள்வி எழுப்பியுள்ளார்.
ரபேல் விமானங்களை வாங்க 2007ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செய்த ஒப்பந்தத்துடன் ஒப்பிடும்போது, 2016ம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஒப்பந்தத்தில் குறைந்த விலை, வேகமாக விநியோகம், சிறந்த பராமரிப்பு போன்ற அம்சங்கள் இருக்கின்றன என்றும் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.