சென்னை: ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்துள்ளது தமிழக அரசு! இதற்கான உத்தரவு இன்று பிறப்பிக்கப் பட்டுள்ளது.
அண்மையில் பொங்கல் தினத்தை அடுத்து தொடர்ச்சியாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர், ஆசிரியர்கள் போராட்டம் நடைபெற்றது. அதில், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது, சம்பள முரண்பாடுகளை நீக்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டன.
மேலும் சில கோரிக்கைகளுடன் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் மக்களிடம் பெரும் ஆதரவைப் பெறவில்லை. பொதுமக்கள் ஆதரவில்லாததால், அரசும் இந்தப் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. தொடர்ந்து இந்தப் போராட்டங்களில் பங்கேற்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப் பட்டனர்.
இந்நிலையில், தங்களது சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் தமிழக அரசை வலியுறுத்தினர். இந்நிலையில், ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளின் கோரிக்கையை ஏற்று, போராட்டத்தின் போது சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து பள்ளி கல்வித்துறை இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இது ஆசிரியர்களுக்கு பெரும் மன நிம்மதியை அளித்துள்ளது.