புது தில்லி: 16வது மக்களவையின் கடைசி நாளில் இன்று அனைவருக்கும் நன்றி தெரிவித்து மோடி பேசினார். சுமார் அரை மணி நேரம் தனது அரசு செய்துள்ள சாதனைகளையும் நாட்டுக்குக் கிடைத்த மதிப்பையும், உலக நாடுகளில் நம் நாட்டுக்குக் கிடைத்த கௌரவத்தையும் பட்டியலிட்ட மோடி, இதுவரை இல்லாத அளவுக்கு மகளிர் அதிகம் பேர் இடம்பெற்றுள்ள அமைச்சரவை இது தான்; இந்த மக்களவைக்கு 44 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்றும், தங்கள் அரசு 100 சதவீதத்துக்கும் மேல் உழைத்திருக்கிறது; இங்கிருந்து 85 சதவிகித மனநிறைவோடு விடைபெறுகிறோம் என்றும் கூறினார்.
மேலும், இந்திய தேசமே இப்போது எங்களது அரசின் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளது என்றும் கூறிய மோடி, கடந்த 4 ஆண்டுகளில்தான் அதிக அளவு செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன என்றார்.
வெளிநாடுகள் நம்மை மதிக்கின்றன என்று கூறியவர், வெளிநாட்டு தலைவர்களும் தற்போது இந்தியத் தலைவர்களை மதிக்கத் தொடங்கியுள்ளனர். எனது ஆட்சியில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு கூடுதல் மரியாதை கிடைத்துள்ளது, இந்த அரசு மதிப்புக்குரிய அரசு என்ற பெருமிதத்தைப் பெற்றிருக்கிறது என்றார்.
ஐ.நா. அவையில் இந்தியாவின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.
கடந்த 5 ஆண்டுகளில் இயற்கை இடர்பாடுகளின்போது அண்டை நாடுகளுக்கு அனைத்து உதவிகளும் நாம் செய்திருக்கிறோம் என்று பெருமிதம் பொங்கக் குறிப்பிட்டார் பிரதமர் மோடி.
நாட்டிற்காகவும் நாட்டு மக்களுக்காகவும் 100 சதவீதத்திற்கு மேல் மத்திய அரசு உழைத்துள்ளது என்று அடிக்கோடிட்டார்.
நாட்டின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. இதன் மூலம் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கப் பட்டது. மக்களவையை சிறப்பாக வழிநடத்தியதற்காக அவைத்தலைவர் சுமித்ரா மகாஜனுக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன்.
இந்த நாடாளுமன்றத்தில் பல கூட்டத் தொடர்கள் ஆக்கபூர்வமாக இருந்தன. இது மகிழ்ச்சி அளிக்கிறது. 16வது மக்களவையில் என்னுடன் பணியாற்றிய அனைத்து எம்.பி.க்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். என் அரசின் புகழ்பாட நான் இங்கே வரவில்லை; அரசு ஆற்றிய பணிகள் குறித்து எடுத்துக் கூறவே வந்தேன். கிட்டத்தட்ட 30 ஆண்டுக்குப் பிறகு காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சி தனிப் பெரும்பான்மையுடன் முதல்முறையாக ஆட்சி அமைத்துள்ளது என்றார் மோடி.
இந்த 5 ஆண்டுகளில் நம் நாடு எரிசக்தி துறையில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்துள்ளது. இந்த ஆட்சியில் 203 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. கறுப்பு பணம், ஊழலுக்கு எதிராக கடுமையான சட்டம் நிறைவேற்றப்பட்டது . கறுப்புப் பணத்தை நாட்டிற்கு கொண்டு வருவதில் உறுதியாக உள்ளோம். கறுப்புப் பணம், ஊழலை ஒழிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்தோம். உலகளவில் இந்தியப் பொருளாதாரம் 6 ஆவது இடத்தில் உள்ளது. நள்ளிரவில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்றினோம். ஆதாரை அமல்படுத்தி உலக நாடுகளை ஆச்சர்யப்பட வைத்தோம்.
புவி வெப்பம் அடைதன் குறித்து இப்போது உலக நாடுகள் பேசி வருகின்றன. ஆனால், நாமோ இந்தப் பிரச்னையை எதிர்கொள்ள சர்வதேச சோலார் கூட்டணியை அமைத்துள்ளோம்.
ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுத்தோம். ஏழைகளுக்காகவே மசோதாக்கள பல நிறைவேறியுள்ளன.
உண்மையாகக் கட்டிப்பிடிப்பதற்கும், வலுக்கட்டாயமாக கட்டிப்பிடிப்பதற்குமான வித்தியாசம் எனக்குத் தெரியும். கடந்த 5 ஆண்டுகளில் உங்களிடம் இருந்து பல விஷயங்களைக் கற்றுக் கொண்டுள்ளேன். என்னை வழிநடத்திய அத்வானி உள்ளிட்ட மூத்த தலைவர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஏற்கெனவே மூத்த தலைவர் முலாயம் சிங் எனது அரசை மனதாரப் பாராட்டி விட்டார். அவர் எங்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதற்காக நான் நன்றி தெரிவிக்கிறேன்… என்றார் மோடி!
Speaking in the Lok Sabha. Watch. https://t.co/gZe2KPyjh3
— Narendra Modi (@narendramodi) February 13, 2019