புது தில்லி: 16வது நாடாளுமன்றத்தின் நிறைவு நாளில், பல்வேறு உறுப்பினர்களும் தங்களது வாழ்த்துகளை பிரதமர் மோடிக்கு தெரிவித்தனர். அப்போது, மோடி மீண்டும் பிரதமர் ஆக வருவார் என்று நம்பிக்கையுடன் வாழ்த்தும் தெரிவித்தனர்.
நாட்டின் நலனுக்காக பல்வேறு பணிகளை மேற்கொண்டதால், பா.ஜ.க தலைமையிலான தேஜகூ.ட்டணி மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று நம்பிக்கை தெரிவித்தது அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனை.
அக்கட்சி எம்.பி ஆனந்த்ராவ் அத்சுல் பேசுகையில், வரும் மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றார். அவரது கருத்துக்கு பா.ஜ.க உறுப்பினர்கள் மேஜையைத் தட்டி பலத்த வரவேற்பு தெரிவித்தனர்.
இன்னொரு கூட்டணிக் கட்சித் தலைவரான லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான் பேசிய போது, நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆவது உறுதி என்று கூறினார். வரலாற்றுச் சிறப்புமிக்க பல்வேறு நடவடிக்கைகளை அவர் தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்டது என்று அவர் கூறினார்!
அதுபோல், சீக்கிய சமூகத்தினருக்கு நன்மை செய்யும் வகையில் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக மத்திய அமைச்சரும், அகாலி தள தலைவருமான ஹர்சிம்ரத்
கெளர் பாதல் பாராட்டு தெரிவித்தார்.
இந்நிலையில், கூட்டணியில் இல்லாத அதே நேரம் நட்பை விரும்பும் வகையில் கருத்து சொன்னார் தெலங்கானா ராஷ்டிர சமிதி உறுப்பினர் ஜிதேந்தர் ரெட்டி, அவர் பேசிய போது, தெலங்கானா மக்கள் எப்போதுமே நட்பு பாராட்டுபவர்கள். ஆனால், யார் நண்பர்? யார் எதிரி? என மத்திய அரசுக்கு தெரியவில்லை என்றார்.