காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற இஸ்லாமிய பயங்கரவாத இயக்கமான ஜெய்ஷ் இ மொஹம்மத், இந்திய ராணுவ வீரர்கள் மீது நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில், 40 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், தேசப் பணியில் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த மாவீரர்கள் 40 பேருக்கும் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சியை இன்று இந்து முன்னணி நடத்தியது.
தென்காசி இந்து முன்னணி சார்பில் இன் பாரத பாதுகாவலர்களுக்கு அஞ்சலி செலுத்தப் பட்டது! இதில் மத்திய அரசு வழக்கறிஞர் சாக்ரட்டீஸ், நகர தலைவர் இசக்கிமுத்து, நகர பொதுச் செயலாளர் நாராயணன், மற்றும் இந்து முன்னணி பொறுப்பாளர்கள் இந்து ஆட்டோ முன்னணியினர் மற்றும் சங்க பரிவாரத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
தேசத்திற்காக தன்னுயிர் நீத்த இந்திய ராணுவ வீரர்களுக்கு வெள்ளிக்கிழமை மாலை 5 மணி அளவில் நெல்லை ஜங்ஷனை அடுத்த சிந்துபூந்துறை யில் நெல்லை மாநகர் இந்து முன்னணி சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நாம் மகிழ்வோடு சுதந்திரமாய் வாழ எல்லையில் தன்னுயிர் நீத்த மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி தேசிய கடமையாற்றுவோம் என்று அப்போது கூறப் பட்டது.
திருநெல்வேலி இந்து முன்னணி சார்பாக நடைபெற்ற இந்த அஞ்சலி நிகழ்ச்சியில், இந்து முன்னணி பொறுப்பாளர்களுடன் பாஜக., விஎச்பி., அமைப்பினரும் கலந்து கொண்டு, அஞ்சலி செலுத்தினர்.
இதே போன்ற புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி இந்து மக்கள் கட்சியின் சார்பில் கோவையில் நடத்தப் பட்டது. கோவை தெற்கு தாலுகா அலுவலகம் ஜவான் பவன் முன்பு பந்தையச்சாலை காவல் நிலையம் அருகில் இன்று மாலை 4 மணிக்கு அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் நடைபெற்ற புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியில், ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரை மீட்டு முஸ்லிம் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்; பாகிஸ்தான் மீது போர் தொடுத்து ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் பகுதியை மீட்க வேண்டும் என்று கோஷம் எழுப்பப் பட்டது. பலியான வீரர்களுக்கு நம்முடைய வீரவணக்கத்தை தெரிவிக்கிறோம் என்று கூறி, ராணுவ வீரர்களின் உருவப்படத்தை அலங்கரித்து வைத்து மோட்ச தீபம் ஏற்றி மலர் வழிபாடு செய்தனர்.